சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்.. கிராம சபைகளுக்கு அன்புமணி கோரிக்கை..!
சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபைகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக தண்ணீர் நாளையொட்டி வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் தமிழகத்தில் உள்ள 26,883 சதுப்புநிலங்களையும் அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து கிராமசபை உறுப்பினர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்.
மார்ச் 22, உலக தண்ணீர் நாளை முன்னிட்டு (World Water Day)) 29.03.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பொருள் பட்டியலை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. இக்கூட்டத்தில், ‘நீர் நிலைகளை காக்க 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை வெளியிட வேண்டும்’ என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு.. தமிழ்நாட்டில் எப்போது..? கேள்வி எழுப்பும் அன்புமணி..!
நீர் தேங்கும் நிலப்பகுதிகள் சதுப்புநிலங்கள் எனப்படுகின்றன. ஏரி, குளம், தாங்கல், கழிவேலி, சேற்று நிலம், கழிமுகம், அலையாத்தி காடு, ஊருணி, ஏந்தல், பொய்கை, குட்டை அனைத்தும் சதுப்புநிலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 42,978 சதுப்புநிலங்கள் உள்ளதாக தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் பெருவாரியான சதுப்புநிலங்கள் பயனற்ற நிலங்களாக உருமாற்றப்பட்டுள்ளன. திடக்கழிவுகள், கழிவு நீர், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கேடுகளால் நாசமாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சதுப்புநிலங்கள் ஆணையம் (Tamil Nadu State Wetland Authority) 26.11.2018 அன்று உருவாக்கப்பட்டது. அதிலிருந்து 22.03.2025 உலக தண்ணீர் நாள் வரை 6 ஆண்டு 3 மாதம் 2 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், ஒரே ஒரு சதுப்புநிலம் கூட 2017 சதுப்புநில விதிகளின் கீழ் சதுப்புநிலமாக சட்டப்படி அறிவிக்கை (Notification)) செய்யப்படவில்லை. நமது ஊரின் நீர் நிலைகளும் இவ்வாறு அறிவிக்கை செய்யப்படவில்லை.
இஸ்ரோ SAC Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 11.12.2024-ஆம் நாள் உத்தரவிட்டுள்ளது.
உலக தண்ணீர் நாள் கிராமசபை கூட்டம் தமிழ்நாட்டின் நிலைகளை பாதுகாப்பதற்கான ஒரு நல்வாய்ப்பக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி, அந்தந்த ஊராட்சிகளின் நீர்நிலைகளை 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யக் கோரும் தீர்மானத்தினை உங்கள் ஊர் கிராமசபையில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா..? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு..!