எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, இந்த விஷயத்தை தயவு செய்து திசை திருப்ப வேண்டாம் என பாடகி கல்பனாவின் மகள் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இசை குரலால் பலரது அன்பை பெற்றவர் பிரபல பாடகி கல்பனா. இவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்கொலை முயற்சி:
பிரபல பாடகி கல்பனா தெலங்கானா மாநிலம் ஐதாராபாத் நிஜாம்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது கணவர் பிரசாத் சென்னையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது கணவர் பிரசாத் சென்னையில் இருந்து நேற்று மாலை 4.30 மணிக்கு பலமுறை போன் செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் போன் எடுக்காததால் , கல்பனா வசிக்கக்கூடிய குடியிருப்பு சங்கச் செயலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் எந்தவித பதிலும் வராததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சீராகும் கல்பனாவின் உடல்நிலை.. பயப்பட வேண்டிய கட்டத்தை தாண்டிவிட்டார்...போலீஸ் தரப்பு..!

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குட்கட்பள்ளி போலீசார் ஜன்னல் வழியாக பார்த்தும் எந்தவித தடயங்களும் கிடைக்காதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்பொழுது படுக்கை அறையில் தூங்கிய நிலையில் கல்பனா சுயநினைவை இழந்து இருப்பதை பார்த்த போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் டாக்டர்கள் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து அவர் உண்ட மாத்திரைகளை வீரியத்தை குறைக்க சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சைக்குப் பிறகு கல்பனா சுயநினைவு திரும்பினார். தற்போது வென்டிலேட்டர் அகற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு கல்பனா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாகவும் விரைவில் அவர் சகஜ நிலைக்கு திரும்புவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் போலீசார் கல்பனாவிடம் நடந்த விவரங்களை கேட்டு அறிய உள்ளனர். கல்பனா தற்கொலை செய்யும் எண்ணத்தில் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என கல்பனாவிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
தாய்க்கும், மகளுக்கும் சண்டையா?
கல்பனாவின் மூத்த மகள் கேரளாவில் உள்ள நிலையில் மகளை ஐதராபாத்திற்கு வரும்படி கல்பனா அழைத்துள்ளார். ஆனால் அவரது மகள் ஐதராபாத் வரமாட்டேன் கேரளாவில் தான் வசிப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை 4 மணி அளவில் கல்பனா மன அழுத்தத்தைக் குறைக்க புத்துணர்ச்சிக்காக அவ்வப்போது பயன்படுத்தும் மாத்திரையை அதிக அளவில் உட்கொண்டதாகவும், இதனால் சுய நினைவை இழந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவல்களை அவரது மகள் மறுத்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்பனாவை சந்தித்த பின் பேட்டியளித்த அவரது மகள், எனது அம்மா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக தூக்க மாத்திரைகள் சற்று அதிக அளவில் எடுத்துக்கொண்டுள்ளார். தயவுசெய்து இந்த தகவலை மாற்றாதீர்கள் மற்றும் தவறாக சித்தரிக்க வேண்டாம். எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது அம்மா நலமுடன் இருக்கிறார் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: சீராகும் கல்பனாவின் உடல்நிலை.. பயப்பட வேண்டிய கட்டத்தை தாண்டிவிட்டார்...போலீஸ் தரப்பு..!