மும்மொழி கொள்கையைப் பின்பற்றும் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தடை விதிப்பாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தொடங்கியுள்ளது. அது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இணையதளத்தில் மட்டும் ஒரே நாளில் 1 லட்சம் பேர் டிஜிட்டல் கையெழுத்தை பதிவு செய்துள்ளனர். தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொதுமக்கள் நம்பிக்கையாக கையெழுத்திட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பாஜக தொண்டர்களும் தலைவர்களும் பொதுமக்களிடம் கையெழுத்தைப் பெற்று சேகரிக்கின்றனர்.

சென்னையில் பொதுமக்கள் கையெழுத்தை சேகரிக்க சென்ற தமிழிசை சவுந்தரராஜனிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீதிக்கு வந்து மக்களை சந்திப்பது அரசியல் கட்சிகளின் அடிப்படை கடமை, உரிமை. மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் போராடலாம், கிளர்ச்சி செய்யலாம் என முதல்வர் கூறுகிறார். ஆனால், நாங்கள் யாரும் மாநில அரசுக்கு எதிராக போராடவில்லை. கிளர்ச்சி செய்யவில்லை. மக்களை ஒருங்கிணைத்து கையெழுத்து இயக்கம்தான் நடத்துகிறேம்.
இதையும் படிங்க: எடப்பாடியாருக்காக பாஜக தலைமையிடம் அண்ணாமலை போட்ட சபதம்... காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!

தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்தது, திமுக அரசின் கோழைத்தனம், பயத்தைக் காட்டுகிறது. நாங்கள் சொன்னதுபோல 1 கோடி கையெழுத்தை வாங்கி, குடியரசு தலைவரிடம் கொடுக்கதான் போகிறோம். எப்படி ஒரு பொய்யான மொழி அரசியலை வைத்து, திமுக அரசியல் செய்கிறது என்பதை உடைத்து, சமக்கல்வி என்பதை பாஜக நிலைநாட்டி கொடுக்கும்.
சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார், விசிக தலைவர் திருமாவளவன். அவருக்கு மூன்றாவது மொழி படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளின் வலி எப்படி தெரியும்? குழந்தை உள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும் இதன் அருமை புரியும். கஜினி பட சூர்யா போல, திமுக எம்.பி. கனிமொழி, 2006-2014-ஐ மறந்துவிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது சமஸ்கிருந்த வளர்ச்சிக்கு ரூ.675 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்கு ரூ.75 கோடி மட்டுமே நிதி வழங்கினர். இதற்கு கனிமொழி முதலில் பதில் சொல்லட்டும். அதேபோல ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்தியை எப்படி வளர்ப்பது என்று நாடாளுமன்றத்தில் 170 பரிந்துரைகளை வைத்தார்.
ஆனால் இப்போது, அவர் இந்தி திணிப்பு பற்றி பேசுகிறார்.

இந்த கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டிய காலக்கட்டத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு 10 மொழிகளை படிக்க வேண்டும் என்கிறார். அதனால்தான் ஆந்திராவில் இருப்பவர்கள் உலகளவில் சாதிக்கிறார்கள். நாம் பழைய பஞ்சாங்கத்தை பேசிக் கொண்டிருந்தால், எப்படி உலகத்தை ஆளுவோம். மொழியை தடுக்க இவர்களுக்கு உரிமையே இல்லை.

மும்மொழி கொள்கையை எதிர்க்கும் முதல்வர், தமிழகத்துக்குள் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டியதுதானே. மூன்றாவது மொழியை யாரையும் படிக்க விடாமல் தடுக்க வேண்டியதுதானே. எதற்காக, இரண்டு விதமான மக்களை உருவாக்குகிறீர்கள். நாடாளுமன்றத்தில் எத்தனை எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல், பல அரசியல் கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளன" என்று அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் தமிழக பாஜக பயப்படாது... தமிழிசை கைதுக்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்...!