தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக.. ஜெயக்குமார் பேச்சுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி..!
தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, நாதக தவிர 43 அரசியல் கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில் தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் எதிர்கட்சியான அதிமுகவும் பங்கேற்றது. அதன் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். ஆனால் கூட்டம் முடிந்தபின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக நாடகம் நடத்துகிறது என்று விமர்சித்து இருந்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு...
தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப் போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர்.. ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி.. அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன.?
கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக் குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதலமைச்சரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார்.
தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா?
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது.
பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை.
முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும்!
இவ்வாறு அந்த பதிவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ தமிழ்நாட்டின் நலன் பாதிக்கப்படும் விவகாரங்களில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் மாறிமாறி குற்றஞ்சாட்டுவதை விடுத்து கரம்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: என்னா அடி... பொன்னாடை போர்த்த வந்த அதிமுக நிர்வாகியை போட்டுப் பொளந்த ராஜேந்திர பாலாஜி...!