திமுகவுக்கு 200 தொகுதியில் வெற்றியா.? அடுத்து பாஜக ஆட்சியில்... முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை.!
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், "தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து தமிழகம் முழுவதும் 8 பொதுக் கூட்டங்களை பாஜக நடத்த உள்ளது. ஏழை, எளியவர்களின் முன்னேற்றம் என்பது கல்வியைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். அதற்காகத்தான் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது இதில் உள்ள முக்கியமான அம்சம். ஆனால், தமிழில் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை திமுகவினர் சொல்ல மாட்டார்கள். புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் 3-ம் மொழியாக கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. அதை மாற்றி, ஏதாவது ஓர் இந்திய மொழியை 3ஆவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மாற்றினார்.
மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் தொடங்கி 18 நாட்களில் 26 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது தமிழகத்தில் ஓர் அரசியல் புரட்சி. மே இறுதிக்குள் ஒரு கோடியை எட்ட வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. தேசிய கல்விக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. ஆனால், இதை மறைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர்.
மாநில முதல்வர்களின் தேவையில்லாத ஒரு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடத்தியுள்ளார். தமிழகத்தைக் குப்பைக் கிடங்காக மாற்றும் கேரள முதல்வர், தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை அடிப்படையில் நடக்காது; விகிதாச்சார அடிப்படையில்தான் நடைபெறும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர் தெரிவித்தும்கூட, கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மூன்று மொழிகள் படிக்கக் கூடாது.. மூன்று வேளையும் சாராயம் குடிக்கலாம்.. திமுக அரசை போட்டுதாக்கிய வாசன்!!
கடந்த ஆண்டு தமிழகம் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் தொகை ரூ.9 லட்சம் கோடி. இந்தியாவில் யாருமே இவ்வளவு கடன் வாங்கவில்லை. வரலாறு காணாத மோசமான ஆட்சிக்கு தமிழக மக்கள் 200 தொகுதிகளை எப்படித் தருவார்கள்? தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியையும் பிஎம்ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம்." என்று அண்ணாமலை பேசினார்.
இதையும் படிங்க: இந்தி டப்பிங் தேவையா... டென்ஷனான பிரகாஷ் ராஜ்!!