பாஜக, அதிமுக வழியில் பயணிக்கும் விஜய்; தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
தற்போது அதிமுக, தேமுதிக, பாஜக வழியில் தேர்தலை புறக்கணிப்பதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நடைபெற்ற விளவங்கோடு, விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது. அதே முனைப்போடு ஈரோடு கிழக்கை வெல்ல திமுக தீயாய் வேலை செய்து வருகிறது.
இதனிடையே, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிருவார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். தற்போது அதிமுக, தேமுதிக, பாஜக வழியில் தேர்தலை புறக்கணிப்பதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’பாடி கட்டாத லாரியில் லோடு ஏற்ற முடியுமா’? - விஜய் முன் உள்ள சிக்கல்...தப்ப முடியுமா?