×
 

திமுகன்னா ரெண்டு கொம்பு முளைச்சிருக்கா..? கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலின் அரசை வசைபாடும் எடப்பாடி பழனிச்சாமி.!

திமுகவினர் என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?. ‘போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்’ என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.

போதாக்குறைக்கு, ‘திமுக கட்சிக்காரன்’ எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா? தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்குதானா முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே?


உடனடியாக இந்தக் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்" என்று அந்தப் பதிவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 2 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தவெக....சாதித்ததா?- ஒரு அலசல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share