இதனால்தான் என்னை மாணவிகள் அப்பா, அப்பா என்று அழைக்கிறார்கள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி..!
தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றியிருப்பதை மறந்துவிடக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “முன்பு வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி நாம் இன்றைக்கு வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். மத்திய சென்னை, தென்சென்னை வளர்ந்து வந்திருக்கிறதோ, அதேபோல் இந்த வடசென்னைப் பகுதியையும் மாற்றிட வேண்டும், அதைவிட பெரிதாகவும் சிறப்பாகவும் உருவாக்கிட வேண்டும் என்பதற்காகத்தான் திமுக அரசு இன்றைக்கு சிறப்பாக பல்வேறுத் திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது.
முதலில் வடசென்னை பகுதிக்காக சட்டமன்றத்தில் ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்தோம். வடசென்னை வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும் என்று நான் அறிவித்தேன். இப்போது ரூ. 1000 கோடி அல்ல, ரூ. 6400 கோடியாக உயர்த்தப்பட்டு பணிகளையெல்லாம் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 100க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளோம். இன்னும் மீதி இருக்கும் திட்டங்கள் என்னென்ன என்று நீங்கள் கேட்கக் கூடும்? இதில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அறிவித்த திட்டங்கள் பல. தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
புதுமைப் பெண் என்கிற திட்டம் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கு செல்கிற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்து இன்றைக்கு அது வழங்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், மாணவிகள் என்னைப் பார்த்து அப்பா, அப்பா என்று அழைக்கிறார்கள். இது ஓர் உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான செய்தி. இதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழ் புதல்வன் என்கிற திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: திமுகவின் நாடகம்..! இந்தியை 'இந்திய மொழி' என்று சொன்ன பைத்தியக்காரன் யார்..?- சீமான் ஆத்திரம்..!
திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறபோது நாம் உணவை கொடுக்காமல் அனுப்பிவைக்கிறோமே என்கிற ஏக்கத்தில் இருந்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் காலை உணவுத் திட்டத்தை அறிவித்தோம். குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன் அவர்களுக்கு காலை உணவினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்வதற்கு காரணம், இதுவெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் இடம் பெறவில்லை. இல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கிற ஆட்சிதான் இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அந்த ஆட்சியின் சார்பில் இன்று மக்களுக்கு வீடுகளை உருவாக்கி உங்களுக்காக இத்திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதை நீங்கள் நல்ல வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறப்பான ஆட்சியை இன்றைக்கு உங்களுக்காக வழங்கிக்கொண்டிருக்கும் இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஒரு கொசு.. கொசுக்களைப் பற்றி பேச வேண்டாம்.. ஜெயக்குமார் தாறுமாறு விமர்சனம்.!