பட்ஜெட்டில் பீகாருக்கு கிடைத்தது போல ஆந்திராவுக்கு ஏன் வாங்கல.. சந்திரபாபு நாயுடுவை வறுத்தெடுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி.!
பீகார் போல ஆந்திரா பட்ஜெட்டில் ஏன் திட்டங்களைப் பெறவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு மோடி அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு , திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு புதிய விமான நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம், தொழிற்சாலைகள், வேளாண் திட்டங்கள் என்று பட்ஜெட்டில் தாராளம் காட்டப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பங்கு முக்கியமானது. இதனால் பீகாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆந்திராவுக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடி வருகின்றன. இது இந்திய நாடு முழுமைக்குமான பட்ஜெட்டா, பீகாருக்கான பட்ஜெட்டா என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதே நேரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தளத்தில், “இந்த ஆண்டுக்கான பட்ஜெட், மோடி தலைமையில், ஒரு தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. இது பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது, அதே நேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சிக்கான ஆறு முக்கிய துறைகளையும் அடையாளம் காட்டுகிறது. நமது நாட்டிற்கு வளமான எதிர்காலத்தை உறுதியளிக்கிறது.” என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே.. விளம்பர மோக அரசு திமுக அரசுதான்.. வானதி சீனிவாசனுக்கு வந்த கோபம்.!
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பீகார் போல ஆந்திர மாநிலத்துக்குத் திட்டங்களைப் பெறத் தவறியதற்காக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாகக் சாடியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் நிர்வாகி கார்த்திக் யெல்லபிரகடா வெளியிட்டிருக்கும் வீடியோவில், “சந்திரபாபு நாயுடு தலைமையிலான கட்சியும், நிதிஷ் குமார் தலைமையிலான கட்சியும் நாட்டின் குறிப்பிடத்தக்க கட்சிகளாக இருந்தபோதிலும், ஆந்திராவைவிட பீகார் ர் அதிக நன்மையைப் பெற்றிருப்பதைக் காண்கிறோம். மத்தியில் 16 எம்.பி.க்களைக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, மாநிலத்திற்கு கணிசமான பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெறத் தவறியது எப்படி?
இந்தக் கூட்டணி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் ஏமாற்றப்பட்டதாக ஆந்திர மக்கள் உணர்கிறார்கள். ஆந்திரப் பிரதேசம் கல்வி, வேளாண்மை, தொழில், உள்கட்டமைப்புத் துறைகளில் பட்ஜெட் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பூஜ்ஜியமாக உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... இது இந்திய அரசின் பட்ஜெட்டா.? பீகார் அரசின் பட்ஜெட்டா.? காங்கிரஸ் சும்மா கிழி.!