கடலூரில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் அமர்வு அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. முழுக்க, முழுக்க ஆளுநர் செய்தது சட்டவிரோதம், அவருடைய அதிகாரத்தைத் தாண்டி அவர் செயல்பட்டு இருக்கிறார் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாவை 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளார்.ஒப்புதல் வழங்குவதற்கான, காலக்கெடுவையும் தீர்மானித்து உள்ளனர் நீதிபதிகள். ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்பட்டு இருக்கிறார் என்பதற்கான தீர்ப்பு இது.

இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இத்தீர்ப்பில் எதிர்காலத்தில் ஆளுநர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க மறுத்த 10 மசோதாவிற்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கியுள்ளது. தீர்ப்பு கூறப்பட்ட தினத்திலிருந்து சட்டமாக்கப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
சிறப்பான தீர்ப்பை பெற்ற தமிழக முதல்வருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக உள்ளது. மத்திய அரசும், ஆளுநரும் தீர்ப்பு பற்றி ஒன்றும் கூறாமல் அமைதியாக உள்ளனர். உச்ச நீதிமன்றம் ஆளுநர் சட்ட வரம்பை மீறி நடந்துள்ளார் என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக ரவியை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு மரியாதை கொடுக்கிற விஷயம்.
இதையும் படிங்க: இவர்கள் அதிகார மையமாக மாறுவதற்கு முற்றுபுள்ளி... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கமல் வரவேற்பு!!

வக்பு சட்டத் திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளது. கேரளா சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து மா.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 17-ம் தேதி தமிழக முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற உள்ளன. மத்திய அரசு சிலிண்டர் எரிவாயு விலையை உயர்த்தியது கண்டனத்துக்குரியது. தமிழ் மீது அவ்வளவு அக்கறை கொண்டுள்ள பிரதமர் ஏன் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை.
இன்றும் இந்தி மட்டும்தான் ஆட்சி மொழியாக உள்ளது. அதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர முடியுமா? தமிழகத்துக்கு வரும்போது மட்டும் பிரதமர் தமிழைப் பற்றி பேசி நாடகம் ஆட வேண்டாம்." என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடு.. பாஜகவுக்கு சவுக்கடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் செல்வபெருந்தகை!