அமாவாசைக்குள் கதையை முடிச்சிரு.. தேதி குறித்து கொடுத்த சாமியார்.. கூலிப்படையை ஏவியவர் கைது..!
சொத்து பிரச்னை காரணமாக நகை அடகு கடை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் அவரது உறவினர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆம்பூர் நகைக்கடை பஜாரில் சௌடாம்பிகா என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு தனது நண்பருடன் தனித்தனியே இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது சோலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அருணை மடக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். அருண் ரத்த வெள்ளத்தில் கூச்சிலிட்டுள்ளார். முன்னாள் சென்று கொண்டிருந்த அவரது நண்பர் திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இதில் கழுத்துப் பகுதியில் வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த அருணை, அவரது நண்பர் ஆம்பூர் அரசு மருத்துவமனை அட்மிட் செய்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அருண் அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: 10 எஸ்.பி., 15 டிஐஜி... ஹை அலர்ட்டில் ராமேஸ்வரம்... பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி குமார் மற்றும் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்த, அருணின் சொந்த தாய்மாமன் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் விஜயகுமார் குடும்பத்தாருக்கும் அருண் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சொத்து தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது தெரிந்தது.
விஜயகுமார் வீட்டிற்கு கேரளா கொல்லிமலை பகுதியில் இருந்தும் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் சாமியார்கள் அமாவாசை, பௌர்ணமி தினத்தில் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில், சொத்து பிரச்சனை காரணமாக சாமியார்கள் சொன்னதை நம்பி அமாவாசைக்குள் அருணை தீர்த்துக்கட்ட விஜயகுமார் முடிவு செய்ததும் தெரிந்தது. சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்துரு மூலமாக அடியாட்களை வைத்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார் விஜயகுமார்.
அதற்காக வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த அயாத்பாஷா மகன் முகமது அலி,(23) கோனாமேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் திருப்பதி(23) கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் ஆகாஷ் (26) சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பார்த்திபன் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் சந்துரு (40), அருணாச்சலம் மகன் ஜெகன் (26) பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் வெங்கடேசன் (33) ஆகிய பகுதிகளிலிருந்து அடியாட்களை வரவழைத்து அருணை கொலை செய்ய இரண்டு லட்சம் ரூபாய் பேரம் பேசி உள்ளார்.
அதில் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து, கொலை செய்ய திட்டம் தீட்டியதில் வெட்டு காயங்களுடன் அருண் தப்பித்து உயிர் பிழைத்துக் கொண்டதால் மறுநாள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் போலீசாரின் விசாரணையில் விஜயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் பேரில் ஆம்பூர் கிராமிய போலீசார் விஜயகுமார் உட்பட 8 பேர் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களால் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். ஆம்பூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக சொந்த தாய் மாமனே கூலி ஆட்களை வைத்து நகை அடகு கடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மராத்தி மொழி பேசாவிட்டால் இனி அடிக்க மாட்டோம்… பலத்த உத்தியுடன் களமிறங்கிய சிவசேனா..!