நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா..? முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி..!
நீட் மரணங்கள் உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா என முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்கையில் உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு...
நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: சென்னையை தொடர்ந்து சேலத்திலும் மெட்ரோ..? தமிழக அரசு பரிசீலனை..!
நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?
செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி
அக் 2021- அனு, கீர்த்திவாசன்
நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்
ஜூன் 2022- தனுஷ்
ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி
ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ
செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி
மார்ச் 2023- சந்துரு
ஏப்ரல் 2023- நிஷா
ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்
டிசம்பர் 2023- ஆகாஷ்
அக்டோபர் 2024- புனிதா
மார்ச் 2025-இந்து, தர்ஷினி
இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சொல்லப்போகும் பதில் என்ன? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?
தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!
இவ்வாறு அதில் இபிஎஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உருவம் தான்-ங்க கருப்பு.. மனசு வெள்ளை..! Ex.MLA மறைவுக்கு முதல்வர், வைகோ இரங்கல்..!