பயங்கரவாத சதியா?.... சிறுமலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை...!
சிறுமலையில் பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) மற்றும் கியூ பிரான்ச் காவலர் விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல், சிறுமலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஜெலிட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் திட்டப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள வனத்துறையினரின் வாட்ச் டவர் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறைக்கும் திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் சிறுமலை வனத்துறையினர் ஜே எம் ஜே என்பவருக்கு சொந்தமான பட்டா காட்டில் துர்நாற்றம் வீசும் பகுதிக்கு சென்று பார்த்த பொழுது மர்மமான முறையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் நண்பிக்கு வெறும் 5 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ரகசியங்கள்..! 2 பேரை தூக்கிய NIA..!
அந்த ஆண் இறந்து நான்கு நாட்களுக்கு மேல் ஆனதால் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இறந்த நபரின் அருகில் பேட்டரி வயர் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதை கண்டனர். அப்போது அருகே செல்லும் பொழுது மர்ம பொருள் வெடித்ததில் மணிகண்டன், கார்த்திக் என இரு காவலர்கள் மற்றும் ஆரோக்கிய செல்வம் என்ற வனத்துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.இதில் இருசக்கர வாகன பேக்டரி மற்றும் 8 ஜெலட்டின் குச்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) மற்றும் க்யூ பிரான்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வெடிகுண்டு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால் கொலையா? அல்லது சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் வெடி பொருட்கள் கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தற்போது சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் என் ஐ ஏ சோதனை செய்துள்ளனர்.இறந்த கேரளா சேர்ந்த சபு என்பவருக்கு ஏற்கனவே சிறுமலையில் சொந்தமான இடம் இருந்தது உள்ளது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு... பாவா பக்ருதீனைத் தட்டித்தூக்கிய என்.ஐ.ஏ.!