கும்பகோணத்தில் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," தமிழகத்தில் உள்ள இந்து கோயில் சொத்துகள் மற்றும் ஏழை மக்களின் நிலங்களை அபகரிக்கும் சட்டமாக வக்பு வாரிய சட்டம் உள்ளது. 1996ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டத் திருத்தத்துக்கு முன்பாக வக்பு வாரியத்துக்கு 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. தற்போது அது 12.40 லட்சம் ஏக்கராக மாறிவிட்டது. லட்சக்கணக்கான கோடி மதிப்பு வக்பு சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்டு முஸ்லிம் சமுதாயத்திடம் ஒப்படைப்போம். வக்பு சொத்துகள் என்றால், உங்களுக்காக நானே போராடுவேன்.

இந்த விஷயத்தில் திமுகவினரை முஸ்லிம்கள் நம்பக் கூடாது. 2026ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசு இருக்கப் போவதில்லை. வக்பு திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காகவே வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
புதுக்கோட்டை, திருவாரூரில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைகள் மரத்தடியில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள 14,500 பள்ளிகளை பிஎம்ஸ்ரீ திட்டம் மூலம் மேம்படுத்த கட்டிடங்கள், கல்வி, விளையாட்டு உபகரணங்களுக்கான நிதியாக ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை பவழங்குகிறேன் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால், அதை வேண்டாம் எனக் கூறிவிட்டு, மரத்தடியில் வகுப்பறைகளை நடத்துகின்றனர். எனவே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதவி விலக வேண்டும்.

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசிய ரவுடித்தனத்துக்கு காரணமாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இருந்துள்ளார். அவர் மீது வழக்கு தொடர வேண்டும். பாஜக கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்கும். மேலிடம் கூறுவதைத் தமிழக பாஜகவினர் அப்படியே செயல்படுத்துவோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. அதனால், தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்." என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இதையும் படிங்க: உழைப்பை சுரண்டாதீங்க..! அங்கன்வாடி பணியாளர்களுக்காக குரல் கொடுத்த சீமான்..!
இதையும் படிங்க: கனிமொழி அக்கா..! உங்க அண்ணா கிட்ட சொல்லுங்க.. இல்ல என் அண்ணன் கிட்ட விடுங்க - தவெக நிர்வாகி மாஸ் ஸ்பீச்..!