×
 

வேளாண் அறிக்கை இல்ல, வெத்துவேட்டு அறிக்கை... திமுகவை சாடிய ஓ.பி.எஸ்..!

2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தி உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று வேளாண்மை பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. பட்ஜெட்டை வரவேற்று ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில் பட்ஜெட் மீதான அதிருப்தியை மற்றொரு தரப்பில் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உழவுத் தொழில் வேறு தொழில் புரிபவர்களுக்கு எல்லாம் உணவளித்துத் தாங்குவதால் உழவர்கள் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள் என்றார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட அச்சாணி போன்றவர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அவர்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இடம்பெறாதது உழவர்கள் மத்தியில் மிகப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திமுகவிற்கு ரொம்ப அலட்சியம்..! நேரடியாக அட்டாக் செய்த ஓ.பி.எஸ்..!

 திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் ஆலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் காகித வடிவிலேயே உள்ளது என கூறினார்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அளித்தது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இந்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை. வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஏதும் இடம் பெறாதது விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்தார்.

இதேபோன்று, கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது எனவும் இதுகுறித்து எந்த ஓர் அறிவிப்பும் இடம் பெறாதது கரும்பு விவசாயிகளிடையே மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது என்றும் கூறினார்.

வேளாண் நிதிநிலை அறிக்கையுடன், அதற்கான முக்கிய நோக்கங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டு இருந்தாலும், அந்த நோக்கங்களை அடைவதற்கான திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இல்லை என தெரிவித்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 360 ஏக்கர் நிலப்பரப்பில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்; தென் தமிழகத்திற்கென மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை என கூறிய ஓ.பன்னீர் செல்வம், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கக்கூடிய, வேளாண் உற்பத்தியை பெருக்கக்கூடிய திட்டங்கள் ஏதுமில்லாத வெத்துவேட்டு அறிக்கையாக, விளம்பர அறிக்கையாக வேளாண் நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது என விமர்சித்தார்.

இதையும் படிங்க: முடிவெடுப்பதில் ஆளுமை திறன் இல்லாதவர் ஓபிஎஸ்... ஆர். பி.உதயகுமார் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share