×
 

பிரதமர் வரும்போது ஊட்டிக்கு செல்வதா.? மன்னிப்பு கேளுங்க.. முதல்வர் ஸ்டாலினை வசைபாடும் அண்ணாமலை!

தமிழக மக்களுக்காக பணி செய்ய வந்த பிரதமரை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டிருக்கிறார். அதற்கு முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் மோடி ரூ.8300 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளார். ராமநவமி நாளில் ரூ.580 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை. இதற்காக முதல்வர் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது.தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க வேண்டியது, நம்முடைய பிரதிநிதியாக உள்ள முதல்வரின் தலையாய கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றாமல் வெயில் கொடுமையால் ஊட்டிக்கு சென்று விட்டார். பாஜக இதை வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மக்களுக்காக பணி செய்ய வந்த பிரதமரை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டிருக்கிறார்.

அதற்கு முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் ஊட்டியில் உட்கார்ந்து கொண்டு ராமேஸ்வரம் வரும் பிரதமர், தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச வேண்டும் என கூறியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழக முதல்வர் தவறாகப் பேசி வருகிறார். இதை ஒரு காரணமாக வைத்து ஊட்டியில் ஒளிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் பங்கேற்றது அரசு விழா. இதனால் மேடைக்கு நான் செல்லவில்லை. அதே நேரத்தில் பிரதமர் ராமேஸ்வரம் கோயில் சென்றபோது உடன் சென்றேன். மேடையில் மக்கள் பிரதிநிதிகளாக மத்திய அமைச்சர் எல்.முருகன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி திறந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுவது பற்றி எனக்கு தெரியாது.

இதையும் படிங்க: எப்படி இருந்த அதிமுக இப்படி ஆயிடுச்சி.. அதிமுகவுக்காக உச் கொட்டும் கார்த்தி சிதம்பரம்.!

நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி தைரியமாக கூறுவாரா என முதல்வர் பேசியுள்ளார். இந்திரா காந்தியை திட்டியவர் கருணாநிதி. பின்னர் இந்திராவை வரவேற்றார். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள். நான்கு ஆண்டுகளாக அந்த ரகசியம் எங்கு உள்ளது என்பதைச் சொல்லவில்லை.உப்பு சப்பு இல்லாத காரணத்தை முன்வைத்து அடுத்தவர்கள் கூட்டணி குறித்து முதல்வர் தேவையில்லாமல் பேசியுள்ளார். இது முதல்வர் வேலை இல்லாமல் உள்ளார் என்பதையே காட்டுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என பலமுறை கூறிவிட்டேன். இதுவரை தலைவராக இருந்து என்ன பணி செய்தேனோ அதே பணியைத் தொண்டனாக இருந்து தொடர்ந்து செய்வேன்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாம்பன் பால விழா.. விடுமுறையைக் கொண்டாட ஊட்டி செல்வதா.? மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்த அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share