சதுரகிரி செல்லுவோருக்கு பறந்த அதிரடி உத்தரவு… மீறினால் கைது!!
சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சதுரகிரி மலையில் இரவில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று சடையாண்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மேலும் அதில், சதுரகிரி மலையில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்களது வழிபாடு தடைபடுகிறது. எனவே நவராத்திரி விழாவையொட்டி சதுரகிரி மலையில் இரவு நேரங்களில் தங்குவதற்கு அனுமதிக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொதுமக்களுக்கு வழிபாட்டு சுதந்திரமும் முழுமையாக வழங்கப்படுவது அவசியம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதை வனத்துறை தடுக்க இயலாது. இயற்கை பேரிடரில் பக்தர்கள் சிக்குவதை தவிர்க்கும் வகையில் சதுரகிரி மலைப்பகுதியில் ஆங்காங்கே பாலங்கள் அமைக்கப்படும் என ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ போராட்டம்... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!
அந்த வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மலையடிவாரத்தில் இருந்து வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல கோயிலில் இருந்து மாலை 4 மணிக்குள் அடிவாரத்துக்கு பக்தர்கள் திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும். இரவில் யாரும் அனுமதியின்றி மலையில் தங்கக்கூடாது. மீறி யாராவது உரிய அனுமதியின்றி இரவில் தங்கினால் கைது நடவடிக்கையை வனத்துறை எடுக்கலாம். அதேபோல தினமும் எத்தனை பேர் மலைக்கு சென்று திரும்புகின்றனர் என்பதையும் வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
பருவகால மாற்றம், பேரிடர் சமயங்களில் பக்தர்களை மலை ஏற அனுமதிப்பது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது. மலைப்பாதைகளில் குப்பை போடுவது, பாலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும். வனத்துறை சோதனைச்சாவடியில் பக்தர்களை முழுமையாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும். பக்தர்களை கண்காணிக்க ஆங்காங்கே வனத்துறையினர் பணியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கு வனத்துறை மற்றும் அறநிலையத்துறையினர் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் பேரணி, ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..!