அடமானம் வைத்த பத்திரத்தை தொலைத்த வங்கி... ரூ.2 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு..!
அடமானமாக வைத்த விற்பனை பத்திரத்தை தொலைத்தற்காக வாடிக்கையாளருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பணியாற்றி வந்த தனசேகரன் அதே வங்கியில் விற்பனை பத்திரத்தை அடமானமாக வைத்து லோன் பெற்றுள்ளார். ஓய்வுப் பெற இருந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனசேகரன் அந்த கடனை முழுமையாக செலுத்தியுள்ளார்.
இதனை அடுத்து தனது அசல் விற்பனை பத்திரத்தை வழங்கக்கோரி தனசேகரன் வங்கியிடம் முறையிட்டுள்ளார். பத்திரம் தொலைந்து போனதாக கூறிய வங்கி நிர்வாகம் நகல் பத்திரம் பெற உதவுவதாக கூறியதுடன் அவருக்கு இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்கியது.
இதையும் படிங்க: டிராபிக்கை குறைக்க இதுதான் வழி! அரசுக்கு காவல்துறை வழங்கிய முக்கிய பரிந்துரைகள்
இதனை எதிர்த்து தனசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், லோன் திரும்ப செலுத்தப்பட்ட பின்னர் உடனடியாக பத்திரத்தை வழங்க வேண்டுமெனவும் அப்படி வழங்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 5,000 ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கூறினார்.
வாங்கிய கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிப்படி வட்டி வசூலிக்கும் வங்கி இந்த விவகாரத்திலும் ரிசர்வ் வங்கி விதிப்படி செயல்பட வேண்டுமென வாதிட்டார்.
வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இழப்பீடு குறித்து உயர் நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது எனவும் அதற்கு சிவில் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் எனக்கூறினார்.
இதனையடுத்து, ரிசர்வ் வங்கி விதிகள் தெளிவாக உள்ள நிலையில் இழப்பீடு தொடர்பாக மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை எனக்கூறிய நீதிபதி மனுதாரருக்கு இழப்பீடாக இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பிரதமரே வயநாட்டுக்கு நிதி கொடுங்க... பிரியங்காவின் முதல் கடிதம்..!