×
 

ஒரே மேடையில் சீமான், அண்ணாமலை; பகீர் கிளப்பும் பாஜக அரசியல் கணக்கு... பதற்றத்தில் திராவிட கட்சிகள்...! 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அருகருகே உட்கார்ந்திருந்ததும், ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசியதும் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது. 

செங்கல்பட்டில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரே மேடையில் கலந்து கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது .

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த கூட்டணி அமைவதற்கு ஆதரவாக பல அதிமுக தலைவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார். 

இதையும் படிங்க: இன்றும் ஆஜராகாத சீமான்... நாளை ஆஜராகவில்லையெனில்... நீதிமன்றம் எச்சரிக்கை!!

நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக தகவல்கள் வெளியானது. அவரை தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியான நிலையில் அந்த தகவலில் உண்மை இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுப்பு தெரிவித்திருந்தார்.

தனியாக போட்டியிடுவதாக கூறி நாங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறோம். சந்தித்திருந்தால் சந்தித்தேன் என நேரடியாக சொல்வேன் என சீமான் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராயகம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் பேச்சு போட்டியின் இறுதி சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் பயிலும் மாணவர்களின் பேச்சு திறனை அறியும் விதத்தில் ஒன்பது மண்டலங்களாக பேச்சு போட்டிகள் நடைபெற்றது. அதன் இறுதி சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நேற்று  நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக  தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சமீப காலமாக திமுகவை சீமான் அதிகளவு விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலை மற்றும் சீமான் இருவரும் இணைந்து ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது பின்னணியில் அரசியல் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக மற்றும் அதிமுகவை பொறுத்தவரை வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கும் சீமான் தங்கள் கூட்டணிக்கு வந்தால் திமுகவை வீழ்த்தி விடலாம் என இரண்டு கட்சிகளும் கணக்கு போட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அருகருகே உட்கார்ந்திருந்ததும், ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசியதும் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது. 
 

இதையும் படிங்க: அண்ணாமலை முன்பு பிரதமர் மோடியை சுட்டிகாட்டிய சீமான்.. என்ன சொன்னாரு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share