“யாரா இருந்தாலும் இதுதான் ரூல்ஸ்” - ஆளுநர் விவகாரத்தில் திமுக பக்கம் திரும்பிய விஜய்!
தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனது உரையை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திமுகவிற்கு இடையே மோதல் வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்ற பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு கூட உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார். இன்றும் கடந்த ஆண்டு கூறிய அதே காரணத்தைச் சொல்லி உரையை வாசிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, அவையை விட்டே வெளிநடப்பு செய்தது சர்ச்சையாகியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயலை தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் விமர்சித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
இதையும் படிங்க: திமுக பார்முலாவை கையில் எடுக்கும் தவெக... தயாராகும் மா.செ. பட்டியல்...!
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சும்மா இருந்தால் சுகம் தராது இந்த அரசியல்..! புஸ்ஸியை அனுப்பி ஆழம் பார்த்த விஜய்..!