×
 

சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நிறுத்தியது ஏன்? தவெக தலைவர் விஜய் கேள்வி...

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென அது நிறுத்தப்பட்டது ஏன் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும் - தேசியகீதம் இறுதியிலும் பாடப்படுவதே தமிழக சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு என குறிப்பிட்டுள்ளார். பொன்விழா கண்ட தமிழக சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும், தமிழக சட்டமன்ற மரபை காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் அந்த செய்திக்குறிப்பில் நினைவுகூர்ந்துள்ளார். 

ஒவ்வொரு சட்டமன்றம் கூடும்போதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்பதோடு இந்த போக்கு கைவிடப்பட வேண்டும் என்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்கள் இடம்பெற வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார். 


ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிரபப்பை நிறுத்தப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை வெளிப்படையாக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் விஜய் சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக திமுக போராட்ட அறிவிப்பு... ஆளுநர் பதவி தேவையா என முதலமைச்சர் கேள்வி...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share