ஓபிஎஸ் ஒரு கொசு.. கொசுக்களைப் பற்றி பேச வேண்டாம்.. ஜெயக்குமார் தாறுமாறு விமர்சனம்.!
ஓபிஎஸ் ஒரு கொசு. கொசுக்களைப் பற்றியெல்லாம் பேச வேண்டாம் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
அதிமுகவை தேர்தலில் வெற்றி பெற வைக்கும் ரகசியம் தன்னிடம் இருப்பதாகவும், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி இருக்காது என்றும் விரைவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒரு தொண்டர் பொறுப்பேற்பார் என்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருந்தார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடிக் கொடுத்தார்.
"ஓபிஎஸ் ஒரு கொசு. கொசுக்களைப் பற்றியெல்லாம் பேச வேண்டாம். நாட்டில் எவ்வளவோ பிரச்னை உள்ளன. ஓபிஎஸ் ஏதோ ரகசியம் என்று சொல்கிறார். ரகசியம் என்கிற வார்த்தை யாரோடு யார் தொடர்புடையது என்று தெரியும். நீட் ரகசியம் என்றால் உதயநிதிதான். திமுகவுடன் தொடர்பு இருப்பதால், அந்த நோய் அவருக்கிம் தொற்றிக் கொண்டு விட்டது. ரகசியம் என்று சொல்லி தொண்டர்களை ஏமாற்றும் வேலையை ஓபிஎஸும் அவரது வகையறாக்களும் செய்து வருகிறார்கள்.
அண்ணா வழியில் அதிமுக அரசு இருமொழிக் கொள்கையைக் கடைபிடித்து வருகிறது. ஒரு மொழியை விரும்பி யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால், ஒரு மொழியை யாரும் திணிக்க கூடாது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள சூழலில், தமிழ் தாய் மொழியாக உள்ளது. தாய் மொழி எந்த நிலையிலும் அழியக் கூடாது என்பதற்காக மொழிப்போராட்டம் நடைபெற்றது. பாலுக்கும் காவலன்; பூனைக்கும் தோழன் என்பது போல திமுக அரசின் நிலைப்பாடு இதில் உள்ளது.
தமிழகத்துக்கு 11லட்சம் கோடியை மத்திய அரசு கொடுத்ததாக எல். முருகன் கூறுகிறார். அது மக்கள் செலுத்தும் வரிப்பணம் தானே. உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு பாஜக அரசு எவ்வளவு கொடுத்தது என்று சொல்ல முடியுமா? பாஜக அரசு என்ன உங்கள் வீட்டு பணத்தையா கொடுக்குது? யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால் குஜராத் மாநிலத்திற்கு என்றால் அதிக நிதியை கொடுக்கின்றனர்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் மீது கை வைத்தால்... தலைமையில் மாற்றம் ஏற்படும்..! எடப்பாடியாருக்கு கே.சி.பழனிசாமி எச்சரிக்கை..!
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும் என்றால், இது இந்திய அரசியலமைப்பு திட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசை பொறுத்தவை மாபெரும் துரோகத்தை செய்து வருகிறது. 2026ஆம் ஆண்டுக்கு பிறகு பாஜக உடன் திமுக சேர்வதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது. இதனால் திமுக இதில் அதிகம் பேசாது. ஆர்ப்பாட்டம் நடத்துவதுபோல் செய்துவிட்டு, பிரச்னையை அப்படியே விட்டுவிடுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி அதிமுக பேசி வருகிறது." என்று ஜெயக்குமார் தெரிவித்தார்..
இதையும் படிங்க: எடப்பாடி ஓ.கே. சொன்னா அடுத்த நொடியே அதைச் செய்ய தயார்... ஓபிஎஸை எச்சரித்த ஆர்.பி. உதயக்குமார்...!