அறிவு நகரை.. சேலம், கோவை, மதுரைக்கு மாத்துங்க..! பாமக அன்புமணி அட்வைஸ்
திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சேலம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் சேலம் இரும்பாலைக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலத்திலோ, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் அரசுக்கு சொந்தமாக உள்ள நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் 1703 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இப்போது அறிவுநகரம் அமைக்கப்படும் நிலப்பரப்பு 870 ஏக்கராக குறைக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். இது திருவள்ளூர் மாவட்ட உழவர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் விஷயம் தான் என்றாலும் முழுமையான வெற்றி அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல தமிழக அரசே அனுமதி வழங்குவதா? கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல்..
அறிவுசார் நகரத்திற்காக ஊத்துகோட்டை வட்டத்திலுள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களில் நில எடுப்பு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அப்பகுதியில் 556 ஏக்கர் அரசு புறப்போக்கு நிலங்கள் இருக்கும் நிலையில், அதையும், உழவர்களுக்கு சொந்தமான 1146 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களையும் கையகப்படுத்த அரசு தீர்மானித்ததை அன்புமணி நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழக அரசின் முடிவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதமே நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து பாமக சார்பில் அந்தப் பகுதியில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அறிவு நகரம் அமைப்பதற்கான நிலப்பரப்பை 1703 ஏக்கரில் இருந்து 1424 ஏக்கராக தமிழக அரசு குறைத்தது. இப்போது அப்பரப்பை 870 ஏக்கராகக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அறிவு நகரம் அமைப்பதையும், அங்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்களை ஏற்படுத்துவதையும் பாமக எப்போதும் ஆதரிக்கிறது. அதற்காக ஆரணி ஆற்றங்கரையில் மூன்று போகங்களும் சிறப்பாக விளையக்கூடிய, ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக்கூடிய நிலங்களை ஏக்கருக்கு ரூ.15 லட்சம் என்ற அடிமாட்டு விலைக்கு அரசு பிடுங்க நினைப்பதை பா.ம.க அனுமதிக்காது. எந்த ஒரு திட்டத்திற்காகவும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படக் கூடாது என்பது தான் பாமகவின் நிலைப்பாடு என அன்புமணி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி போராட்டம்... பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு...