விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!
கொடைக்கானல் அருகே தனியார் விடுதியின் உரிமையாளரை அடித்து கொன்று உடலின் பாகங்களை வெட்டி கேம்ப் பயரில் விறகுடன் வைத்து எரித்த வழக்கில் நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் குருசடி மெத்து அருகே விடுதியின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், உடலில் உள்ள சில பாகங்களை எரித்து உள்ளதாகவும் மதுரை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது சம்பந்தமாக அந்த விடுதியில் வேலை பார்த்த மதுரை தத்னேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 29) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. மதுரை அருகே உள்ள மறு வாழ்வு மையத்தில் தான் சிகிச்சையில் இருந்ததாகவும், அங்கு கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த சிவராஜ் (61) என்பவரும் சிகிச்சையில் இருந்ததாகவும் மணிகண்டன் தெரிவித்தார்.
சிவராஜை கடந்த ஒரு மாதத்திற்கு முன் அவரது தாயார் மற்றும் சகோதரி மறு வாழ்வு மையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது பெரும்பள்ளம், குருசடி மெத்து அருகே உள்ள அவருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் சிவராஜ் தங்கியுள்ளார். சில நாட்களாக விடுதி செயல்படாமல் இருந்ததுள்ளது. இதனை நடத்துவதற்கு பணியாட்கள் தேவைப்பட்டதால் மறு வாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த நண்பர்களை அவ்வப்போது விடுதிக்கு அழைத்தும் வந்துள்ளார் சிவராஜ். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி சிவராஜ் மற்றும் இவரது மறு வாழ்வு மைய நண்பர்களான மதுரையை சேர்ந்த மணிகண்டன் (29) சிவகங்கையை சேர்ந்த சந்தோஸ்(21) அருண் ( 23 ) ஜோசப் உள்ளிட்ட ஐந்து நபர்களும் ஒன்றாக இணைந்து அறையில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது விடுதிக்கு வந்திருந்த மணிகண்டன் 3 நாட்களாக சமைத்தும் உள்ளார். இந்நிலையில் தினந்தோறும் சம்பளம் எவ்வளவு ரூபாய் தர முடியும் என மறு வாழ்வு மைய இளைஞர்கள் சிவராஜிடம் கேட்டுள்ளனர். அப்போது 1000 ரூபாய் தர முடியும் என விடுதி உரிமையாளர் தெரிவித்ததற்கு, 8 மணி நேரம் பணி புரியும் கொத்தானரே 1000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
எங்களுக்கு 1500 ரூபாய் சம்பளம் வேண்டும் என்றும்,3 நாட்கள் சமைத்ததற்கு சம்பளம் வேண்டும் என்றும் மணிகண்டன் கேட்டுள்ளார். இதனையடுத்து விடுதி உரிமையாளர் இளைஞர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: நேற்று ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு... இன்றே கொடைக்கானலில் தீயாய் வேலையை ஆரம்பித்த திண்டுக்கல் கலெக்டர்...!
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் மறு வாழ்வு மைய இளைஞர்களில் மணிகண்டன் கட்டையை வைத்து விடுதி உரிமையாளரான சிவராஜை பலமாக தாக்கியுள்ளார். இதில் சிவராஜ் உயிருக்கு போராடிய நிலையில் மீண்டும் உடன் இருந்த மறு வாழ்வு மைய இளைஞர்கள் அதிக போதையில் அங்கு விறகு வெட்ட வைத்திருந்த அறிவாள்களை கொண்டு கை,கால்கள்,இடுப்பு பகுதிகளில் வெட்டி உள்ளனர்.
உடல் பாகங்கள் அறுக்கப்பட்ட நிலையில் உடல் அறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு அறையின் அருகே உள்ள கேம்ப் பயர் அமைக்கும் இடத்தில் விறகுகளை கொண்டு தீ மூட்டியதுடன் வெட்டப்பட்ட கை,கால்களையும் எரித்துள்ளனர்.
அதிகாலை ஆனதால் மது போதை குறைந்த பிறகு தலை மற்றும் மார்பு பகுதி பாதி எரிந்து கருகிய நிலையில் காணப்பட்டதால் தனியார் விடுதி அருகே உள்ள கட்டிடத்தில் தூக்கி வீசியதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து புதன்கிழமை அன்று மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புள்ள சிவகங்கையை சேர்ந்த சந்தோஷை சிவகங்கையில் மருத்துவரிடம் சில்மிசம் செய்த வழக்கில் புதன்கிழமை கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புள்ள இருவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று கொடைக்கானல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அருண் ஆஜாராகியுள்ளார்.
மேலும் கொடைக்கானல் காவல் துறையினர் மதுரை கூடல் நகர் பகுதியில் ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விடுதியின் உரிமையாளர் சிவராஜை அவரது விடுதியிலேயே வைத்து கொலை செய்து எரித்த சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே விடுதியின் உரிமையாளரான சிவராஜ் காணவில்லை என அவரது சகோதரி கடந்த 23ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொலையாளிகள் குறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீரென கேட்ட பயங்கர சத்தம்... குலுங்கிய வீடுகள்... பீதியில் திண்டுக்கல் மக்கள்...!