இந்தியாவுலயே தமிழ்நாடு தான் டாப்.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்..!
நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் தற்போது 13 லட்சத்து 86 ஆயிரத்து 150 அலோபதி மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாகவும், 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 ஆயுஷ் மருத்துவர்கள் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி, இயற்கை மருத்துவர்கள்) உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற எண்ணிக்கையில் இருப்பதாக கூறியுள்ளது.
2014 ஆம் ஆண்டு நாட்டில் மொத்தமாக 387 கல்லூரிகள் மற்றும் 51 ஆயிரத்து 400 எம்.பி. பி.எஸ் இடங்கள் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு 536 கல்லூரிகளாகவும், 80 ஆயிரத்து 312 இடங்களாகவும் உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊட்டி மக்களுக்கு செம டிரீட்.. நீலகிரியில் ஒரு மினி டைடல் பார்க்..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
2023-24-ம் ஆண்டில் தான் மிக அதிகளவாக 722 மருத்துவ கல்லூரிகளும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 297 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாது நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்றும் கர்நாடகாவில் 70 மருத்துவ கல்லூரிகள், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 68, தெலுங்கானாவில் 56, குஜராத்தில் 40, ஆந்திராவில் 37 மருத்துவ கல்லூரிகள் என்ற எண்ணிக்கையில் இருப்பதாக கூறியுள்ளது.
எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக கூறிய மத்திய அரசு, அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 11 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளதகாவும், வெறும் 95 இடங்கள் வித்தியாசத்தில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 845 இடங்களுடன் மகாராஷ்டிரா 3 வது இடத்திலும், 9 ஆயிரத்து 903 எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் 4-வது இடத்திலும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கச்சத்தீவு பற்றி ஒரு வார்த்தை கூட பேசல..! பிரதமரை கிழித்த செல்வப்பெருந்தகை..!