×
 

பஹல்காம் தாக்குதல்.. வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி..!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் இறந்த நிலையில் இதுகுறித்து வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார். ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். 

பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். சவுதியில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய மோடி, டில்லியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார்.

பஹல்காம் சென்ற அமித் ஷா, பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், டில்லியில் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 

இதையும் படிங்க: இந்தியா அழைத்துவரப்பட்டார் தஹவூர் ராணா.. 18 நாள் என்ஐஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி..!

ஏற்கனவே, பஹல்காமில், ராணுவம், விமானப்படை ஹெலிகாப்டர்கள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய காஷ்மீர் எல்லையிலும், பஹல்காம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உறுதி அளித்துள்ளனர்.இந்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழு காஷ்மீர் விரைந்தது. பயங்கரவாதிகளின் ஊடுருவல், அவர்கள் தீட்டிய சதித்திட்டம், பதுங்கியிருக்கும் இடம் குறித்து ராணுவத்தினருடன் என்ஐஏ அதிகாரிள் ஆலோசனை நடத்தினர். 

தற்போது, வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவங்க உள்ளனர். வழக்கு குறித்து முக்கிய ஆவணங்கள், எப்.ஐ.ஆர்., நகல் ஆகியவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 48 மணி நேரத்தில் பல பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு எதிராகவும், இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையும் படிங்க: மும்பை தீவிரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share