தரம் உயர்த்தப்பட்டும் "நோ யூஸ்"..அரசு மருத்துவமனையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் - மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் அவலத்தை கண்டித்தும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்து காலி பணியிடங்களையும் உடனே நிரப்பிட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது 152 படுகைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.எனினும் இம்மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் மாணவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பல்வேறு நிலை பணிகளில் 251 பணியிடங்களில் 119 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது குறிப்பாக மருத்துவர்கள் மட்டும் 50 பணியமர்த்தப்பட வேண்டிய நிலையில் 18 மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது அதேபோல் 135 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 51 செவிலியர்கள் மற்றும் 77 துப்புரவு பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 34 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
மேலும் இம்மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை கண் காது மூக்கு தொண்டை உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் இல்லாததால் வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட போதிலும் எவ்விதமான அடிப்படை வசதியோ மருத்துவர்கள் உள்ளிட்ட எந்தவித பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேவையான அனைத்து பணியிடங்களையும் உருவாக்கி அதனை நிரப்பிட வேண்டும் மருத்துவமனை விரிவாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அனைத்து உள்கட்ட அமைப்புகளுடன் மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர் ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆஹா.. நல்லா இருக்கே இந்த நாடகம்.. முதலமைச்சரை அறிக்கையில் கதறவிட்ட அன்புமணி ராமதாஸ்
இதையும் படிங்க: திமுக போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி எப்படி...பாமக வழக்கு, விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்