திராவிட மாடல் ஆட்சியில் வெட்கக்கேடு இது.. திமுக அரசை புரட்டி எடுத்த சீமான்!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"
திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதிகள்கூட முறையாக இல்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி முறையாக இல்லை என்பதால் அங்கு பயில்கின்ற ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தூய்மையற்ற கழிவறைகளும், பராமரிப்பற்ற குடிநீர்த் தொட்டியையும் பயன்படுத்துவதால் மாணவர்களுக்குத் தொற்று நோய்கள் பரவி, அடிக்கடி உடல்நல சீர்கேடும் ஏற்படுகின்றது. தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு அங்கு பயிலும் மாணவ-மாணவியர் வீதியில் இறங்கி போராட்டமும் நடத்தியுள்ளனர்.
இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு, தங்களால்தான் தமிழ்நாடு முன்னேறியது என்றெல்லாம் பெருமை பேசும் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான முறையான கழிவறை மற்றும் தூய குடிநீர் வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது.
ஆகவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் அடிப்படைத் தேவையான கழிவறை மற்றும் தூய குடிநீர் வசதியை உடனடியாக ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கழிவறை மற்றும் தூய குடிநீர் ஏற்படுத்தித் தர தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து விரைவில் நாம் தமிழர் கட்சி விரைவில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி மட்டும் இல்லையென்றால்.. அதிமுக அடமானத்துக்கு போயிருக்கும்.. மாஜி அமைச்சர் சரவெடி!!
இதையும் படிங்க: ஆகஸ்டுக்கு பிறகு மாதம்தோறும் மின்கட்டணம்..! தமிழக அரசு ஆலோசனை..!