இன்றும் ஆஜராகாத சீமான்... நாளை ஆஜராகவில்லையெனில்... நீதிமன்றம் எச்சரிக்கை!!
சீமான் நாளை ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என திருச்சி நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருச்சி எஸ்பியாக இருந்தவர் வருண்குமார். இவர் நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்தார். இதை அடுத்து சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாகவும் சீமான் புகார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார்.
ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த ஜனவரி 30ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது வருண்குமார் திருச்சி ஐஜியாகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜி ஆகவும் உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை முன்பு பிரதமர் மோடியை சுட்டிகாட்டிய சீமான்.. என்ன சொன்னாரு தெரியுமா?
இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார். இந்நிலையில், டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போதும் சீமான் ஆஜராகவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் சீமான் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வருண்குமார் தரப்பு சாட்சியங்களிடம் இன்று விசாரணை நடைபெற்றது. அதில் புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆஜராகி வருண்குமார் தரப்பில் சாட்சியம் அளித்தார்.
தொடர்ந்து வழக்கின் புகார்தாரரான அருண்குமார் தரப்பில் விசாரணைகள் முடிவடைந்தது. இதை அடுத்து சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று ஆஜராகவில்லை. தொடர்ந்து வழக்கை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்றம், இன்று மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டது. ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதை அடுத்து திருச்சி டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் நாளை காலை 10:30 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளதோடு ஏற்கெனவே இன்று மாலை ஆஜராகாத நிலையில், நாளையும் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போர்க்களத்தில் நிற்கும் தளபதி… சீமானை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!