பக்தர்கள் கவனத்திற்கு! திருப்பதி கோவில் ஜூன் மாத ஆன்லைன் டிக்கெட் விவரங்கள் வெளியீடு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு முயற்சிகளை தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை பல்வேறு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனம், அங்கபிரதட்சனம் உள்ளிட்டவைகளில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்வது தொடர்பான விவரங்கள் வெளியானது. அதன்படி, ஆர்ஜித சேவை டிக்கெட்களை குலுக்கல் முறையில் பெற இன்று (18-ம் தேதி) காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதிருஷ்டவசமாக டிக்கெட் பெற்ற பக்தர்கள் வரும் 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி அதற்கான டிக்கெட்களை தங்களது செல்போன் வாயிலாகவே பெற்றுக்கொள்ளலாம் என்றும் இம்மாதம் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஜூன் மாத திருக்கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!
ஜூன் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை திருமலையில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 21-ம் தேதி காலை 11 மணிக்கு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ள தேவஸ்தான நிர்வாகம்,. இவர்களுக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தும் என்றும் ஜூன் மாதத்தில் அங்கப்பிரதட்சனம் செய்ய விரும்பும் பக்தர்கள், வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு அதற்கான இலவச டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ளலாம், 22-ம் தேதி காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் வெளியாகிறது என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 22-ம் தேதி மதியம் 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வெளியாக உள்ளது.
ஜூன் மாதம் ரூ.300 சிறப்பு தரிசனத்தின் வாயிலாக ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட்களை தேவஸ்தானம் வெளியிடுகிறது எனவும், அதே நாள் மதியம் 3 மணிக்கு திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கும் அறைகளுக்காக ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் பக்தர்கள் அனைவரும் தங்களது முன்பதிவுகளை திருப்பதி தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்கிற இணைய தளத்தில் மட்டுமே செய்து கொள்ளுமாறும், மற்ற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாமெனவும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் வைக்க... சர்ச், மசூதிகளைத் திறந்து விட்ட சேட்டன்கள்..! மதங்களை கடந்த ஒற்றுமை..!