இந்திய அணியின் வெற்றி நேர்மையானதா? ‘கன்கசனில்’ ராணா சேர்க்கப்பட்டது சரியா?
இங்கிலாந்துக்கு எதிரான டி20
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றாலும், வெற்றியை விட வெற்றி கிடைத்தவிதம் சமூக வலைத்தளத்தில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. புனேயில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியஅணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து தொடரை கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஷியில் இதுவரை தொடரை இழக்காமல் இந்திய அணி பயனித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் 2019ம் ஆண்டிலிருந்து இதுவரை இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரை தொடர்ந்து 17வது முறையாக இந்திய அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
53 ரன்கள் சேர்த்து கடைசிவரை களத்தில் இருந்த ஷிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இது உண்மையான வெற்றியா
இந்திய அணி டி20 தொடரை வென்றாலும், இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் நேர்மை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. ஓவர்டன் வீசிய பந்தில் ஷிவம் துபே ஹெல்மட்டில் பந்துபட்டதால் அவரால் 2வது இன்னிங்ஸில் பீல்டிங் செய்யவில்லை. ஐசிசி விதிப்படி கன்கசனில் மாற்றுவீரரை களமிறக்கி விளையாடலாம்.
ஷிவம் துபேவுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கன்கசன் மாற்றுவீரராகக் களமிறக்கப்பட்டு பந்துவீச வைக்கப்பட்டார். ராணா எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகளும் வெற்றிக்கு முக்கியமானவையாக, திருப்புமுனையாக மாறின.
ஐசிசி விதிப்படி கன்கசன் மாற்றுவீரராக “லைக் டூ லைக்” அதாவது காயமடைந்த ஒரு வீரர் எந்த தகுதியில் இருக்கிறாரா அதே தகுதியில்தான் மாற்றுவீரரையும் களமிறக்க வேண்டும். ஒரு பேட்டர் கன்கசனில் வெளியேறினால் பேட்டரை களமிறக்கலாம், பந்துவீச்சால் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரையும், ஆல்ரவுண்டர் கன்கசனில் அவருக்குப்பதிலாக ஆல்ரவுண்டரையும் களமிறக்கலாம்.
இதையும் படிங்க: முழு சங்கி மாதிரி பேசுறீங்களே சீமான்... கும்பிடு போட்டு கட்சியிலிருந்து ஜூட் விட்ட நாதக முக்கிய மாநில நிர்வாகி.!
ஆனால், ஷிவம் துபே 100 சதவீதம் ஒரு பேட்டர் ஆனால், அவருக்குப்பதிலாக 100 சதவீதம் பந்துவீச்சாளரான ஹர்சித் ராணாவை களமிறக்கி விளையாட வைத்து இந்திய அணி பெற்ற வெற்றி ஏற்றுக்கொள்ள முடியாது என வர்ணனையாளர்களும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டென் மெக்கலமும் போட்டி முடிந்தபின் நடுவர்களுடன் மைதானத்தில் நீண்ட ஆலோசனை நடத்தினார்.
கன்கசன் தேர்வில் உடன்பாடில்லை
இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “கன்கசனில் லைக் டூ லைக் மாற்றுவீரராக ராணா வந்தது சரியானதாக எனக்குத் தெரியவில்லை, இதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை. ஷிவம் துபேயால் 25 கி.மீ வேகத்தில் கூட பந்துவீச முடியாது. ஆனால், ஹர்சித் ராணா 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர், பேட்டிங் சரியாக வராது. ஆனால், துபே சிறந்த பேட்டர். எப்படி இது சரியான கன்கசன் மாற்று வீரராக இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் உண்மையாக வென்றிருக்க வேண்டும். கன்கசனில் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட முடிவை நாங்கள் ஏற்கவில்லை.
மாற்று வீரராக இதுபோன்ற வீரரை களமிறக்கும் முன் எதிரணியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்னிடம் கேட்கவில்லை. எங்களுக்கு வெற்றிபெறுவதற்கு பல வாய்ப்புகள் இந்த ஆட்டத்தில் இருந்தன. ஆனால், பயன்படுத்த முடியாததற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் இதுவும் ஒரு காரணம்” எனத் தெரிவித்தார்.
நாங்கள் முடிவெடுக்கவில்லை
இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் மோர்கல் கூறுகையில் “ இது முற்றிலும் எங்களின் முடிவல்ல. கன்கசன் மாற்றுவீரராக ராமன்தீப் சிங், ஹர்சித் ராணா இருவர் பெயரைக் கொடுத்தபோது, போட்டி நடுவர் ஸ்ரீநாத் தேர்ந்தெடுத்ததுதான் இறுதி முடிவு. பெயரை மட்டுமே நாங்கள் அளிக்க முடியும், முடிவெடுப்பது போட்டி நடுவர்தான்” எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் வர்ணணனையாளர்களாக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன், நிக் நைட் இருவரும், இந்திய அணி கன்கசன் மாற்றுவீரராக துபேவுக்குப் பதிலாக ஹர்சித் ராணா களமிறங்கியது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர்.
இந்திய அணிக்கு நேர்மையான வெற்றியா
இந்திய அணி டி20 தொடரை வென்றாலும், 4வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உண்மையில் இந்தியாவுக்கானதா என்ற சுயகேள்வியை கேட்க வேண்டியதிருக்கிறது. ஐசிசி விதியின்படி, கன்சனில் செல்லும் வீரர் எந்தத் தகுதியில் இருக்கிறாரோ அதேபோல தகுதியுடைய அதாவது “லைக் டூ லைக்” வீரரைத்தான் களமிறக்க வேண்டும். மாற்றுவீரரை களமிறக்கும் முன் எதிரணியினரிடம் ஆலோசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு விதிகளுமே நேற்று கடைபிடிக்கப்படவில்லை.
ஒருவேளை ஐசிசி விதியின்படி துபேவுக்கு மாற்றாக ராமன்தீப் சிங் அல்லது பேட்டரை களமிறக்கி இருந்தால், நேற்றைய ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியிருக்கும். ஏனென்றால், ஹர்சித் ராணா கடைசி நேரத்தில் எடுத்துக் கொடுத்த3 விக்கெட்தான் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தது. அப்படியிருக்கையில் ஹர்சித் ராணாவால் வெற்றி பறிபோனதை, இங்கிலாந்து வீரர்கள் ஏற்கவில்லை என்பதை அதிருப்தியில் தெரிவித்துள்ளனர். இந்திய அணி வெற்றி பெற்ற விதமும் சரியானதா, இது நேர்மையானதா என்ற கேள்விகள், விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைக்கப்படுகிறது.
டாப் ஆர்டர் தோல்வி
இந்திய அணியின் பேட்டிங் நேற்றும் வழக்கம்போல் டாப்ஆர்டர் தோல்வி அடைந்தனர். சாம்ஸன் தொடர்ந்து 4வது போட்டியிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா (29), கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் 2வது முறையாக டக்அவுட்டில் வெளியேறினார். 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது.
6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இடையிலான பார்ட்னர்ஷிப்தான் அணியை பெரிய ஸ்கோருக்கு இட்டுச்சென்றது. ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள்உள்பட 53 ரன்களும், ஷிவம் துபே 33 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவரும் சேர்ந்து 6-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு உதவினர். 180 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என இருந்த இந்திய அணி ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி எடுத்துக் கொடுத்த 2 விக்கெட், ஹர்சித் ராணா, ரவி பிஸ்னோய் எடுத்த தலா 3 விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தின.
குறிப்பாக களத்தில் வலுவாக காலூன்றிய ஹேரி ப்ரூக் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியபோது, அவரின் விக்கெட்டை வருண் வீழ்த்தியது, அதே ஓவரில் கார்ஸ் விக்கெட்டை சாய்த்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தியபோது இங்கிலாந்து சரிவுக்குள் சென்றது.
இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட், பில் சால்ட் இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளே முடிவில் 62 ரன்கள் சேர்த்து ட்கெட்(39) விக்கெட்டை பிஸ்னாயிடம் இழந்திருந்தது.
இங்கிலாந்து அணி வெற்றிக்கு 120 ரன்கள் தேவைப்பட்டது, 14 ஓவர்கள் இருந்தன கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. அக்ஸர் படேல் வீசிய 7-வது ஓவரில் சால்ட்(23) போல்டாகி ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த கேப்டன் பட்லர் 2 ரன்னில் பிஸ்னாய் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
லிவிங்ஸ்டோன், ஹேரி ப்ரூக் இருவரும் களத்தில் நிலைக்கத் தொடங்கினர். ஹேரி பரூக் வழக்கத்துக்கு மாறாக இந்தியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக ராணா பந்துவீச்சில் 6 சிக்ஸர்கள், பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்து, 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ராணா பந்துவீச்சில் 9 ரன்னில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். விக்கெட் சரிந்தபோதிலும் இங்கிலாந்து அணியை ஹேரி ப்ரூக் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
15-வது ஓவரை வருண் வீசினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. களத்தில் செட்டில்ஆன பேட்டர் ஹேரி ப்ரூக்கை(51) வீழ்த்தி, அதேஓவரில் பிரைடன் கார்ஸும் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து சற்று ஆட்டம் கண்டது.
கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்களும், கடைசி 2 ஓவர்களில் 25ரன்களும் தேவைப்பட்டன. டி20 போட்டிகளில் நிச்சயமாக அடைந்துவிடக்கூடிய ஸ்கோர்தான். அதன்பின் கடைசி வரிசை வீரர்கள் பெரிதாக பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை, ஓவர்டன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்தபின், யாரேனும் ஒரு பேட்டர் பொறுப்பெடுத்து பேட் செய்திருந்தால் வெற்றி இங்கிலாந்துபக்கம்தான்.
இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு தாவுகிறாரா..? கோவை சத்யன் என்ன சொல்கிறார் தெரியுமா.?