×
 

இதுதான் தமிழகத்தின் சட்டப்போராட்டம்... ஆளுநருக்கு எதிரான தீர்ப்புக்கு உதயநிதி கருத்து!!

தமிழக ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை ஏற்றுக்கொள்ளாமல் கிடப்பில் போட்டார். அன்று முதல் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதை பலரும் விமர்சனம் செய்தனர். குறிப்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் இதை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த மசோதாவை இன்னும் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இதனிடையே சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அமைத்த குழு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்படி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்தார். இதை அடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும். 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் நடித்த சன் டிவி சீரியல்... உதயநிதியை கலாய்த்த கலாநிதிமாறன்..!

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து கருத்து தெரிவித்த அவர், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் தாமதம் செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.

10 மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக ஒதுக்கிய ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது மற்றும் சட்டப்பூர்வமாக தவறானது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஆளுநர் ஒப்புதலை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும், ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரையிலான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அந்த காலகட்டத்திற்குள் மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . பிரிவு 142 இன் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களின் செல்லுபடியை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி.

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும், நாட்டின் மீது ஒற்றையாட்சி அமைப்பைத் திணிக்கும் முயற்சிகளை எதிர்ப்பதிலும் தனது உறுதியான உறுதிப்பாட்டில் மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தமிழ்நாடு தொடர்ந்து போராடும், தமிழ்நாடு தொடர்ந்து வெற்றி பெறும், நமது மன உறுதியும், உறுதியும் அசைக்க முடியாததாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? - செல்லூர் ராஜூ ஓபன் டாக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share