எடப்பாடியாருடன் மோதல்… செங்கோட்டையனுக்கு செம டிமாண்ட்: திமுக- தவெக இடையே கடும்போட்டி..!
திமுகவின் செல்வாக்கு கொங்குமண்டலத்தில் உயரும் என கணக்குப் போட்ட திமுக தலைமை செங்கோட்டையனுக்கு வலை விரிக்கத் தொடங்கியிருக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனுக்கு திமுக ஒருபுறமும், விஜயின் தவெக மறுபுறமும் வலைவிரித்து வருவது தான் கூல் கொங்கு மண்டலத்தை ஹாட் ஆக்கி இருக்கிறது.
விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியது.எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், '‘அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் விழாவை ஏற்பாடு செய்த குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர்.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா. 2011யில் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை நான் புறக்கணிக்கவில்லை. விழாவிற்கு செல்லவில்லை'' என்று கூறினார்.
செங்கோட்டையனின் அதிருப்திக்கு என்ன காரணம் என அதிமுக-வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''தமிழக அரசியல் களத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நீண்ட நெடிய அனுபவம் உண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கே பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர்தான் செங்கோட்டையன். தவிர, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பின் போது, ‘பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கங்களைக் கொடுத்ததும் செங்கோட்டையன் தான். இந்த விளக்கங்களை கொடுக்கச் சொன்னது சசிகலா. காரணம், செங்கோட்யைனின் அனுபவத்தை சசிகலாவும் அறியாதவர் அல்ல.
இதையும் படிங்க: இது அதிமுக நிகழ்ச்சி அல்ல... செங்கோட்டையனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிவடி....!
ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஆட்சியை சிறப்பாக நடத்தினார். ஆனால், கட்சியை சிறப்பாக வழிநடத்த தவறிவிட்டார். காரணம், இவருக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவர் ‘விட்டமினை’ வாங்கிக்கொண்டு அனுபவம் இல்லாதவர்களையும், அனுசரித்துச் செல்லாதவர்களையும் மா.செ.க்களாக நியமித்தார் என்கிறார்கள். இதற்கு மலைக்கோட்டையில் நடந்து வரும் மல்லுக்கேட்டே உதாரணம்.
இந்நிலையில்தான் மறைந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். காலத்தில் ஈரோட்டில் செல்வாக்காக இருந்த செங்கோட்டையன் எடப்பாடி காலத்தில் செல்வாக்கை இழந்து அதிருப்தியில் இருக்கிறார். அதற்கும் ஒரு காரணம், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் என்கிறார்கள்.அவர்தான் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பார்த்துக்கொள்கிறார். இவர் எடப்பாடியின் சம்பந்திக்கு நெருங்கிய உறவுக்காரர் என்பதால், எடப்பாடியாலும் கே.சி.கருப்பண்ணன் செயலை மீற முடியவில்லை. இந்த நிலையில்தான் செங்கோட்டையன் ஒதுங்கியிருக்கிறார்.
ஏற்கனவே, அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்குமண்டலத்தில் செந்தில் பாலாஜி ஓட்டைபோட்டு விட்டார். தற்போது, அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனும் திமுக-விற்கு வந்துவிட்டால், திமுகவின் செல்வாக்கு கொங்குமண்டலத்தில் உயரும் என கணக்குப் போட்ட திமுக தலைமை செங்கோட்டையனுக்கு வலை விரிக்கத் தொடங்கியிருக்கிறது.
அதே நேரத்தில் கொங்குமண்டலத்தில் தவெகவும் தனது பலத்தை நிரூப்பிக்க நினைக்கிறது. அதற்காக எந்த சர்ச்சையிலும் சிக்காத அனைவரிடத்திலும் அனுசரித்து போகிற எம்.ஜி.ஆர் காலத்து ஆளான செங்கோட்டையனை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ‘செங்கோட்டையன் தி.மு.க.விற்கு வருவதை அமைச்சர் முத்துசாமி விரும்பவில்லை. காரணம், செங்கோட்டையனுக்கு திமுகவில் ‘பவர்’ அதிகமாகிவிடும் என்று நினைக்கிறார்.
ஆனால், செங்கோட்டையனின் மனநிலையோ எந்த கட்சிக்கும் போகும் திட்டத்தில் அவர் இல்லை. எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா காலத்து சீனியர். அதிமுக மீது தீவிர பற்று கொண்டவர். அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பாரே தவிர மாற்றுக் கட்சிக்கு செல்லும் முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டார்'' என்கிறார் அந்த அதிமுக சீனியர் நிர்வாகி.
இதையும் படிங்க: அதிமுகவில் எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி..!அதிருப்தியில் செங்கோட்டையன்: ஆதரவாக களமிறங்கிய டிடிவி.தினகரன்..!