×
 

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செக் வைத்த நீதிமன்றம்.. சொத்து குவிப்பு வழக்கால் சிக்கல்!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்ட 4 பேரை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தார். அப்போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர், அவரின் மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018-ல் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை கூறிய குற்றச்சாட்டுகள் முகாந்திரம் இல்லாதவை, சொத்துக்களை முறையாக கணக்கீடு செய்யாமல் தங்களுக்கு எதிரான வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே வழக்கிலிருந்து விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படிங்க: அன்னை இல்லத்தின் ஓனர் நடிகர் பிரபு தான்... சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!

மறுபுறம் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்ற பத்திரிக்கை நகல்களை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விளக்கம் அளித்து வாதிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்து உத்தரவை ரத்து செய்வதாகவும், குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை தினந்தோறும் நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மீது வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராகவும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கிலும், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய வழக்க்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும் உத்தரவுகள் வந்துள்ள நிலையில் தற்போது அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலில் இந்த பொருட்களுக்கு தடை.. மீறினால்.. உயர்நீதிமன்றம் அதிரடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share