பொன்முடி மீது சேறு வீசியவரின் ஜாமீன் மனு.. தீர்ப்பை தள்ளி வைத்த உயர்நீதிமன்றம்..!
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை காரணமாக மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரமாக உள்ள திருவெண்ணைநல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளானது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட அப்போதைய கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி. பொன். கவுதம சிகாமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர்.
இதையும் படிங்க: கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல்விசாரணை கோரிய மனு.. திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் நீதிமன்றத்தில் தகவல்..!
செல்லும் வழியில் இருவேல்பட்டு கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு நிவாரண உதவிகள் செய்ய சென்ற போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாக தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில், அமைச்சர் மீது அரசியல் உள் நோக்கத்துடன் சேறு வீசப்பட்டதால் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், எந்த அரசியல் உள் நோக்கமும் எதுவும் இல்லை என்றும் புயல் பாதிப்பிற்கு நிவாரணம் எதுவும் உடனடியாக வழங்காததால்,விரக்தியில் அது போன்று நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!