இது புதுசா இருக்குண்னே.. நாற்காலிக்கு ரூ. 10.. புது தொழிலால் நபருக்கு குவியும் பாராட்டு!
திருநெல்வேலியில் பேருந்து பயணிகளின் அதிகரிப்பை பயன்படுத்தி ஒருவர் செய்து வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..
திருநெல்வேலியில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் செல்லப்பாண்டியன் சிலை மேம்பாலம் இறங்கும் பகுதியில் இரவில் அதிக நேரம் நடுரோட்டில் நிறுத்தி சரக்குகளையும், பயணிகளையும் ஏற்றிச் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
மாலை 6 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பல்வேறு வழித்தடங்களுக்கும் செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் இந்த வழியாக வந்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஆனால் அங்கு மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுவது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் உள்ளன.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? யாரை பார்த்து? திடீரென ஆவேசமான பொன் ராதா
ஆம்னி பஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில், கிட்டதட்ட சுமார் 6 மணி நேரம் மக்களால் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சி அளிக்கும். பயணிகள் அவர்களின் உடைமைகளோடு பேருந்துகளை ஏறுவதற்கு அங்கும் இங்கும் தத்தளிப்பனர். அந்த வகையில் பயணிகள் அங்கு இளைப்பாறுவதற்கு போதிய வசதியின்றி அவதிக்குள்ளாகி வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, முதியவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும். இதனை கவனித்த அருகில் உள்ள வாகன காப்பகத்தின் உரிமையாளர் ஒருவர், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்காக நாற்காலிகளை வழங்கி வருகிறார். மேலும் அதற்கு கட்டணமாக ரூ.10 வசூலித்து வருகிறார். தினமும் மாலை 6 மணிக்கு அந்த பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் இருக்கைகளை வரிசையாக போடும் அந்த நபர், 12 மணி வரை அமர்வதற்கு ரூ.10 கட்டணம் என்று பேப்பரில் எழுதி அந்த இருக்கையில் ஒட்டியும் வைத்துள்ளார்.
இதே போல் செல்போன் சார்ஜ் போடுவதற்கும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக இந்த ஐடியாவை பயன்படுத்தி அவர் வசூல் செய்து வருகிறார். பஸ் ஏறுவதற்காக வரும் பயணிகளும், எவ்வளவு நேரம் தான் நின்று கொண்டே இருப்பது என சோர்வாகி ரூ.10 தானே என்று நினைத்து காசை கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்கின்றனர்.
பயணிகள் வசதிக்கு ஏற்ப இருபுறமும் கைப்பிடி உள்ளவை, கைப்பிடி இல்லாதவை என விதவிதான இருக்கைகளை அந்த நபர் போட்டு வைத்துள்ளார். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களது பேருந்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது
இதையும் படிங்க: லட்சக்கணக்கில் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. பொலிவுடன் இருக்கும் குமரியின் கண்ணாடி இழை பாலம்!