துரோகம் நிச்சயம் வீழும்! நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் - சூளுரைத்த ஓ.பி.எஸ்..
நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள், துரோகம் நிச்சயம் வீழும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்ற நிலை மாறி, இவையே மனித குலத்தின் வாழ் முறைகள் என்றாக வேண்டும் என பேரறிஞர் அண்ணா கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.. இந்தப் பண்புகள் எல்லாம் மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவதாகும் எனவும் இந்தப் பண்புகள் இல்லாதவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதுதான் பேரறிஞர் அண்ணாவின் பார்வை என்றும் தனி வாழ்வில் ஒழுக்கமற்றவன் பொது வாழ்விலும் ஒழுக்கமற்றவனாகவே இருப்பான் என்பது கம்பனின் அரசியல் பார்வை எனவும் கூறியுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்ட பாராட்டத்தக்க பண்புகளை இன்று வரை தான் கடைபிடித்துக் கொண்டிருப்பதாகவும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு என்றென்றும் விசுவாசமாக இருந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை, தான் சொல்லவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் வரலாற்றில், எந்த நாட்டின் வரலாற்றிலும் ஒருவரை ஒரு அரியாசனத்தில் அமர வைத்துவிட்டு, அதன் பின்னர் உரியவருக்கே அந்த அரியாசனம் திரும்பத் தரப்பட்டதாக வேறு வரலாறே இல்லை, அந்தப் புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் அன்புச் சகோதரர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள்." என்று தன்னைப் பற்றி பெருமையாக பரதனுடன் ஒப்பிட்டுப் பேசியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 11 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி... யார் ஓநாய்? நல்ல வாயா உங்கள் வாய்? - எடப்பாடி மீது பாய்ந்த ஓபிஎஸ்
எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு ஆனால், செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை” என்கிற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க அழிவிலிருந்து தப்பிப்பது என்பது அறவே இயலாத ஒன்று என்று கூறியுள்ளார்.
“பொறுத்தார் பூமியாள்வார்” என்று சொல்வார்கள். எனவே, 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை பொறுத்திருங்கள் என்றும் தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும் எனவும் நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள், துரோகம் நிச்சயம் வீழும், நய வஞ்சகம் நசுக்கப்படும், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது, நய வஞ்சகம் வெற்றி பெறாது என ஓ.பன்னீர் செல்வம் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணி இருக்கும்போது 'வேட்டு' அணி எதற்கு..? எடப்பாடியார் போட்ட சபதம்..!