×
 

‘நான் உருவாக்கிய கட்சி வெளியே போ...’ ஒரே மேடையில் மோதிக் கொண்ட ராமதாஸ்- அன்புமணி... உடையும் பாமக..!

புதிய அலுவகலகத்தின் முகவரியை அன்புமணி அறிவித்துள்ளதால், பாமகவில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


‘‘பாமக அன்புமணி கட்டிபாட்டிலும் இல்லை.... ராமதாஸ் கட்டுப்பாட்டிலும் இல்லை...’’ என முன்பே அரசல் புரசலாக கசிந்த விவகாரம் இன்று மேடையிலேயே அம்பலமாகி இருக்கிறது,

இன்று பாண்டிச்சேரி, சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாமக 2025 சிறப்பு பொதுக்குழுவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகள் காந்தி பரசுராமனின் மகன் முகுந்தன் பரசுராமனை பாமகவின் இளைஞர் அணித் தலைவராக அறிவித்தார். பரசுராமன் முகுந்தனை அறிவித்த போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ராமதாஸ்: ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். கட்சித் தலைவர் அன்புமணிக்கு 50 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுத்தர, ஒரு நல்ல இளைஞரான பரசுராமன் முகுந்தனை மாநில இளைஞரணித் தலைவராக அறிவிக்கிறேன். இன்றில் இருந்து அவர் பொறுப்பை ஏற்று, அன்புமணிக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்பார்.

இதையும் படிங்க: 10.5% விட அதிகம் அனுபவிக்கும் வன்னியர்கள்... 15% ஆக உயர்த்தி திமுகவுக்கு நெருக்கடி... அன்புமணியை ஆட்டி வைக்கும் டேட்டா..!

அன்புமணி ராமதாஸ்: அவன் (முகுந்தன்) கட்சியில் இணைந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. அவனுக்கு இளைஞரணித் தலைவர் பதவியைக் கொடுத்தால் எப்படி? என்ன அனுபவம் உள்ளது அவனுக்கு? நல்ல அனுபவசாலியான நபரை பதவிக்குக் கொண்டு வாருங்கள். களத்தில் திறமையான ஆட்கள் வேண்டும். கட்சியில் இணைந்தவுடன் பொறுப்பு கொடுத்தால் எப்படி?

ராமதாஸ்: யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்கவேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்காதவர்கள் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. மீண்டும் கூறுகிறேன், மாநில இளைஞரணித் தலைவராக முகுந்தனை நியமிக்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்: குடும்பத்தில் இன்னொருவரா..? சென்னை பனையூரில் மூன்றாவது தெருவில் புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்திருக்கிறேன். அங்கு வந்து எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம்.

ராமதாஸ்: மீண்டும் கூறுகிறேன். உங்களின் மாநில இளைஞரணித் தலைவர் முகுந்தன். பரசுராமன் முகுந்தன். இன்னொரு அலுவலகத்தை திறந்துகொள், முகுந்தன் உனக்கு உதவியாக இருப்பார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லை என்றால், வேறு என்ன சொல்வது? விருப்பமில்லாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து விலகிக்கொள்ளலாம். இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வத்தைதான் கேட்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் கட்சியை விட்டு வெளியே செல்லலாம்’’ என்றார்.
உடனே மைக்கை வீசி எறிந்து விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார் அன்புமணி. சிறிது நேரத்டில் ராமதாஸும் வெளியேறி காரில் கிளம்பினார்.அவரது காரை சூழந்து கொண்ட அன்புமணி ஆதரவாளர்கள் "அன்புமணி வாழ்க.. வாழ்க.." என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், புதிய அலுவகலகத்தின் முகவரியை அன்புமணி அறிவித்துள்ளதால், பாமகவில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பாமக இளைஞரணித் தலைவர் பதவியில் இருந்து, பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் சமீபத்தில் விலகினார். அந்தப்பதவியில் ராமதாஸின் மூத்த மகள் வழிப் பேரனான பரசுராமன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார்.

 

இதையும் படிங்க: டேமேஜ் ஆன இமேஜ்... தாய்க்குலத்தின் காலில் விழுந்து கறையைத் துடைத்து கொண்ட எம்.எல்.ஏ..! அசர வைத்த அருள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share