குலைநடுங்க வைத்த சிறுத்தை சிக்கியது ..நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் ..!
கிருஷ்ணகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்புதூர் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் பகுதியில் சிறுத்தை புலி ஒன்றின் நடமாட்டம் இருந்து வந்தது. அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்குவது அந்த பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ச்சியாக அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக வனத்துறையினர் சிறுத்தை புலியைப் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு, அதனைப் பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காலை அந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதை வனத்துறையினர் கண்டு உறுதி செய்தனர்.
இதை எடுத்து பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்குள் விடுவது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துவது தொடர்பாக கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் சிறுத்தையை அடர்ந்த காட்டில் விடுவதாக திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு வருடங்களாக போக்கு காட்டி அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: யானை தந்தத்தில் விநாயகர் சிலை..வாலிபரை தட்டித்தூக்கிய வனத்துறை..!