விசாரணை என்கின்ற பெயரில் போலீஸார் செய்யும் கொடுமையை அனுமதிக்க மாட்டோம்...உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
விசாரணை என்ற பெயரில் போலீசார் கொடுமைப்படுத்துவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சித்தேந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவின் அடிப்படையில், விசாரணை என்கின்ற பெயரில் நந்தம்பாக்கம் போலீசார் கொடுமைப்படுத்துகிறார்கள். எனவே என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணை வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகிலன், மனுதாரருக்கு எதிரான புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்றார்.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரம்... தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்...தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற புகார் என்றால் அது குறித்து போலீசாருக்கு விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த அதிகாரத்தை சட்டத்தின்படிதான் பயன்படுத்த வேண்டும். சட்டம் போலீஸ் விசாரணையில் இருந்து இது போன்ற நபர்களை பாதுகாக்கும் அதிகாரத்தை மாஜிஸ்திரேட்டிடம் வழங்கியுள்ளது.
அதே நேரம் புலன் விசாரணையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. இது போன்ற பல மனுக்கள் இங்கு தாக்கல் செய்யப்படுகிறது. எனவே விசாரணை என்கின்ற பெயரில் போலீசார் செய்யும் கொடுமையை இந்த நீதிமன்றம் கண்டு கொள்ளாமலும், தடுக்காமலும், கண்களை மூடிக்கொண்டும் இருக்க முடியாது.
எனவே ஒரு குற்றப் புகாரில் சம்பந்தப்பட்ட நபரை அல்லது சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு பி.என்.எஸ்.எஸ் சட்ட பிரிவு 129-ன் கீழ் சம்மன் அனுப்ப வேண்டும். அந்த சம்மனில் எப்போது விசாரணைக்கு வர வேண்டும்? தேதி, நேரம் ஆகியவற்றையும் போலீசார் குறிப்பிட வேண்டும்.
அவ்வாறு நடத்தப்படுகின்ற விசாரணையின்போது பதிவு செய்யப்படுகின்ற வாக்குமூலத்தை போலீஸ் நிலைய டைரியில், வழக்கு விசாரணை டைரியில் குறிப்பிட வேண்டும். வழக்கு பதிவு மற்றும் ஆரம்பகட்ட விசாரணையை லலிதா குமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை போலீசார் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: நுகர்வோர் குறைதீர் ஆணைய காலி பணியிடங்கள்... கூடுதல் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம் ...