×
 

வக்கில்லாத திமுக அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

திருச்சி உறையூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கடந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருவதாகவும், ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சுமார் 30 பேர் காய்ச்சல் வயிற்று போக்கு, வாந்தி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த லதா என்ற பெண்ணும் மூன்றரை வயது சிறுமி பிரியங்காவும் கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் உடல்நலம் பாதித்ததாக கூறப்படும் நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சகட்டு மேனிக்கு வசைபாடியுள்ளார். திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுக அமைச்சர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்? இந்த பொம்மை முதலமைச்சரைப் பார்த்து நான் கேட்கிறேன்- அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா?

ஆட்சிக்கு வருவதற்கு முன் மனுக்களை வாங்கி ஒரு பெட்டியில் போட்டார்; இதனை நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டைக்குள் வந்து என் கதவைத் தட்டிக் கேள்வி கேளுங்கள் என்றார். அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை!

இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது! மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த திமுக அரசு, ஒரு Coma அரசு!

உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
 

இதையும் படிங்க: வரலாற்றிலேயே முதல் முறை.. நாளை மறுநாள் தரமான சம்பவம் செய்யப்போகும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share