பழமை வாய்ந்த செப்புப் பட்டயம் கண்டெடுப்பு.. சேதுபதி மன்னரை பற்றிய குறிப்பு.. ஆயிவில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை
ராமநாதபுரம் கடலாடி பத்திரகாளியம்மன் கோயில் அருகே காந்தி நாடார், பாண்டீஸ்வரி இல்லத்தில் மிகப் பழமை வாய்ந்த செப்புப் பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ஆதித்யா சம்பத்குமார். இவர் ராமநாதபுரம் கடலாடி பத்திரகாளியம்மன் கோயில் அருகே காந்தி நாடார், பாண்டீஸ்வரி இல்லத்தில் மிகப் பழமை வாய்ந்த செப்புப் பட்டயம் இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுருவுக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த இடத்திற்கு சென்று பழமை வாய்ந்த செப்புப் பட்டயத்தை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இந்த செப்பு பட்டயம் குறித்து பேசிய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, “600 கிராம் எடையும், 17.5 செ.மீ நீளமும், 30.5 செ.மீ அகலமும் கொண்ட இப்பட்டயத்தில் 52 வரிகள் தமிழிலும், இரு வரிகள் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. கைப்பிடியில் குமரன் துணை என உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இதில் சக ஆண்டு 1667, கலியுகம் 4846, தமிழ் ஆண்டு குரோதன, வைகாசி 29 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1745. இதில் மன்னர் பெயர் ஸ்ரீகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி என உள்ளது. எனினும், இதன் ஆண்டு சிவகுமார சேதுபதியை குறிக்கிறது. அவர் ஆட்சியில், சேது சமஸ்தானத்தின், பாளையம் கிடாத்திருக்கை நாட்டில், சாயல்குடியிலிருக்கும் குமாரமுத்து விஜய ரகுநாத அய்வாய்ப்புலி பெரிய கறுத்துடையார் சேர்வைகாரர், சேது மார்க்கம் கடலாடியில், விஜய ரெகுநாதப் பேட்டையில், அக்ரஹாரம் ஏற்படுத்தி அதை ஸ்ரீரங்கத்திலிருக்கும் வெங்கிட்டராம அய்யங்காருக்கு பிரதிஷ்டை செய்து கொடுத்து, தனது காணியாட்சியாய் வருகிற காக்கைகுட்டம் என்ற ஊரை கல்லுங் காவேரி புல்லும் பூமியும் உள்ளவரை சர்வ மானியமாக கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை: திமுக கவுன்சிலரின் மகன் உள்பட நான்கு பேர் கைது..!
இத்தானத்தை பாதுகாப்பவர்கள் கங்கைக் கரையில் சிவ, விஷ்ணு, பிரம்மா பிரதிஷ்ட்டை, கோடி கன்னியர் தானம், கோதானம், சூரிய, சந்திர கிரகண காலத்தில் பண்ணினால் எந்தப்பலனுண்டோ அதை அனுபவிப்பர். இதற்கு யாராவது தீங்கு செய்தால் கங்கைக் கரையிலே, காராம் பசுவை கொன்ன தோஷத்திலே போவார்கள் எனவும், இதன் சமஸ்கிருதப் பகுதியில் பிறர் கொடுத்ததை பாதுகாத்தால் இரு மடங்கு புண்ணியம். அதை அபகரித்தால் தனது புண்ணியமும் போகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
பரிக்கு நகுலன், கரிக்கு இந்திரன், அனும கேதனன், கருட கேதனன், சிங்க கேதனன் உள்ளிட்ட மன்னரின் 74 விருதுப் பெயர்கள் இதில் உள்ளன. மானியமாக கொடுக்கப்பட்ட காக்கைகுட்டம் கடலாடி அருகிலுள்ளது. கி.பி.18ஆம் நூற்றாண்டில் சாயல்குடி அரண்மனையின் தற்போதைய ஜமீன்தாரும் அவர் தந்தையும் விஜய ரகுநாத பெரிய கறுத்துடையார் சேர்வைகாரர் பட்டத்தை பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாலும்,
கிடாத்திருக்கை எனும் பெயரில் பாளையம் இருந்தாலும் அதன் ஆளுநர் சாயல்குடியில் இருப்பதாக பட்டயத்தில் கூறப்பட்டுள்ளதாலும் சாயல்குடி ஜமீன்தார் தான் கிடாத்திருக்கை பாளையக்காரர் என அறிய முடிகிறது. நாயக்கர் போல சேதுபதிகளும் தங்கள் நாட்டை பல பாளையங்களாக பிரித்து ஆண்டுள்ளனர். பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட இடம், ஊரை பிறருக்கு விற்கும் போது செப்புப்பட்டயம் நில ஆவணமாக வாங்கியவர்களிடம் வழங்கப்பட்டிருக்கலாம்” என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மாப்பிள்ளையை இழுத்துக்கொண்டு ஓடிய மாமியார்… திருமணத்திற்கு ரெடியான மகள் ஏமாற்றம்!!