அன்னை இல்லம் ஜப்தி செய்யும் விவகாரம்.. நடிகர் பிரபு நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அன்னை இல்லத்தில் எனக்கு பங்கு இல்லை.. ஜப்தி விவகாரத்தில் மகன் ராம்குமார் விளக்கம்..!
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நடிகர் சிவாஜி கணேசன், உயிருடன் இருந்த போதே, அன்னை இல்லம் வீட்டை தனக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், இதற்கு தனது சகோதரரும், சகோதரிகளும் ஒப்புக் கொண்டதை அடுத்து தனது பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளராகியுள்ள நிலையில், சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்னையில் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக நடிகர் பிரபு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன், அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அன்னை இல்லத்தில் எனக்கு பங்கு இல்லை.. ஜப்தி விவகாரத்தில் மகன் ராம்குமார் விளக்கம்..!