டெல்லியில் அனல் பறக்கும் பிரசாரம்: தலைவர்கள் முற்றுகையால் திணறும் தலைநகர்!
டெல்லி சட்டசபை தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
தலைவர்கள் ஆங்காங்கே முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் தலைநகர் டெல்லி போக்குவரத்து நெரிசலால் திணறிக் கொண்டிருக்கிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். நேற்று பிரசசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.
டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன.கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைத்தது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து சிக்கி சிறை சென்றது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
கடந்த 2024 செப்டம்பர் 21-ம் தேதி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, அக்கட்சியில் அமைச்சராக இருந்த அதிஷி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், தற்போது நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது பாஜகவினர், போலீசார் தாக்குதல்: நடவடிக்கை கோரி, தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்
முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பேசி வருகிறார். டெல்லியில் மீண்டும் ஷீலா தீட்சித் மாடல் ஆட்சி கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தே.ஜ. கூட்டணியில் 2 இடங்களை மட்டும் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக ஒதுக்கி உள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜக முழு வீச்சில் இறங்கியுள்ளது.
இதற்கிடையே, டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைகிறது. அங்கு பல மாநிலங்களை சேர்ந்த மக்களும் வசிப்பதால், தே.ஜ.கூட்டணியில் உள்ள பிரபல தலைவர்களும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
70 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது, ஆம் ஆத்மி ஆட்சிக்கு டெல்லி அதிக விலை கொடுத்துவிட்டது. அதில் இருந்து விடுபடடெல்லி முடிவு செய்துவிட்டது. சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு அக்கட்சியின் கொள்கைகள் வழிவகுத்தன.
மக்களை கொள்ளையடித்தவர்கள், அதற்கு விலை கொடுத்தாக வேண்டும். கடந்த 11 ஆண்டு களில் தலைநகரையே அழித்துவிட்டது ஆம் ஆத்மி. பாஜக தேர்தல் அறிக்கையில் மூத்த குடிமக்கள், பெண்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவாதம் அளித்தால், இந்த மோடி முழு மூச்சுடன் செயல்பட்டு அதை நிறைவேற்றுவார்.
பட்ஜெட்டில் முதல்முறையாக ரூ.12 லட்சம்வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. மோடியின் வாக்குறுதிகளை பட்ஜெட் நிறைவேற்றியுள்ளது. சுற்றுலா, உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வரும் 8-ம் தேதி பாஜக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமைக்கும். பாஜக அரசு அமைந்ததும், வாக்குறுதிகளை நிறைவேற்றும். மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்துக்குள், டெல்லியில் உள்ள பெண்கள் ரூ.2,500 உதவித் தொகை பெறத் தொடங்குவார்கள்.
பெண்கள் எனக்கு கவசமாக பணியாற்றி மிகப் பெரிய பங்களிப்பை அளித்ததால்தான், எனது அரசு மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. அதேபோல, டெல்லியிலும் பெண்கள் ஆதரவுடன் பாஜக வெற்றி பெறும் என பிரதமர் மோடி கூறினார். முன்னதாக வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கபடவிருக்கிறது.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு... பாவா பக்ருதீனைத் தட்டித்தூக்கிய என்.ஐ.ஏ.!