×
 

தொடர் தோல்வியை திமுகவும் சந்தித்துள்ளது...இனி திமுகவையும் அப்படி அழைக்கலாமா?- டி.ஜெயக்குமார் கேள்வி

மும்மொழி கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது, ஓ பன்னீர்செல்வம் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார், திமுகவை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ் இன் எண்ணமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது...

“மின் வாரியத்தில் 60,000 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. சில ஆயிரம் பேரை வைத்துக்கொண்டு மின் வாரியத்தை செயல்படுத்தினால் அனைவருக்கும் பணிச்சுமை. ஆண்டுக்கு 1 லட்சம் வேலை என்றீர்கள். அரசுத்துறை நிறுவனம் மின்வாரியம், போக்குவரத்து தொழிலாளர்கள் காலி பணியிடங்களை இதுவரை நிரப்பவில்லை. ஆசிரியர்கள், அரசௌ ஊழியர்கள் கோரிக்கை காதுகேளாமல் இருக்கிறார்கள். இது ஒரு காதுகேளா அரசாக இருக்கிறது. ஒரு மூதாட்டிக்கு திமுக மீது எவ்வளவு வெறுப்பு இருந்தால் மூதாட்டி ஒருவர் ஸ்டாலின் புகைப்படத்தின் மீது மண்ணை அள்ளி வீசுவார். அதிலும் கொடுமை என்னவென்றால் அந்த பாட்டியை தேட காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தில் 8 தொகுதிகள் பறிபோகும் அபாயம்..!

அதிமுக தொடர் தோல்வி என்று எங்களைப்பார்த்து எப்படி கேட்க முடிகிறது உங்களால், சும்மா அதையே பேசிக்கிட்டிருக்கீங்க. தேர்தல் என்பது நாணயத்தின் இருபக்கம் போல் வெற்றி-தோல்வி. 91-ல் தோல்வி அடைந்தார்கள் திமுக. 2 சீட்டு வென்றார்கள், ஆர்.கே.நகரில் டெபாசிட் வாங்காமல் போனார்களா இல்லையா? மறுபடியும் தேர்தலில் நின்றார்கள் அல்லவா. 2001, 2011, 2016 -ல் தோற்றார்கள் அல்லவா?. 12 ஆண்டு வனவாசம் அனுப்பினார் எம்ஜிஆர். 1977, 80, 84 என தொடர் தோல்வியை கொடுத்தாரா இல்லையா? ஆகவே தொடர்தோல்வி திமுகன்னு சொல்லலாமா. 

இது ஒரு கட்டமைப்பு ஆகவே அதை புரிந்துக்கொள்ளுங்கள். எம்ஜிஆர் மாளிகையின் தூண் கூட ஓபிஎஸ்-ஐ துரோகி என சொல்லும். திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக அவர் செயல்படுகிறார். திமுகவை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ்-ன் எண்ணமாக உள்ளது. அதிமுக மூலமாக வளர்ந்த ஓபிஎஸ் அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாதது பெரிய வருத்தமாக உள்ளது.

APPA செயலி குறித்து பேசிய ஜெயக்குமார் செயல்பாடற்ற அரசாங்கம் செயலியை மட்டும் தான் உருவாக்க முடியும். 10 செயலியை 4 ஆண்டுகளில் உருவாக்கினார்கள் அதனால் என்ன மாற்றம் நடந்திருக்கு சொல்லுங்கள். தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை ஜாதிய கலாச்சாரம், ஜாதியை கொடுமைகள் உள்ளிட்டவற்றால்  சீரழிந்து கிடக்கிறது. அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட கிடையாது. அதை சீர் செய்யவில்லை. இவர்களே நீங்க அப்பா நான் அண்ணன் என்கிறார். இதில் அமைச்சர் எ.வ.வேலு அப்பான்னு கூப்பிடாதீங்க தாய்மாமான்னு கூப்பிடுங்கன்னு சொல்கிறார். 

நாளை ஒருவர் வந்து மச்சான்னு கூப்பிடுங்கன்னு சொல்கிறார். கேவலமா இருக்கு. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு அதற்கு தீர்வு காண்பதோ, தீர்வளிக்கும் செயலோ இல்லை. மாமன் மச்சான்னு சொல்லிகிட்டு, தமிழ்நாட்டை கோமாளி அரசாங்கம் ஆண்டு கொண்டு இருக்கிறது. காவல்துறையை ஏவல் துறையாக்கி அதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவது தான் திமுக அரசின் வேலை. எத்தனை ரெய்டுகள் வந்தாலும் அதிமுக அஞ்சப் போவது கிடையாது. 

கோவையில் எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன்  வீட்டில் பழிவாங்கும் நோக்கத்தில் ரெய்டு நடைபெறுகிறது. யார் அந்த சார் என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை. அதை விசாரித்து நடவடிக்கை எடுக்காமல், பத்திரிக்கையாளர்கள் மீது அந்த டீமை ஏவிவிட்டு விசாரணை என்கிற பெயரில் உங்ககிட்ட செல்போனை பிடுங்கி பிரச்சனை செய்தார்கள். எத்தனை பொண்டாட்டி, எத்தனை வீடு இதெல்லாம் பத்திரிக்கையாளர்களை பார்த்து கேட்கும் கேள்விகளா? பின்னர் நீதிமன்றத்தில் குட்டுபட்டார்கள். இப்ப சார்ஜ் ஷீட் போட்டிருக்காங்க படிச்சுட்டு சொல்கிறேன்.

திமுக அரசுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை. அம்மா மருந்தகம் தமிழ்நாட்டில் சிறப்பாக விளங்கியது. அம்மா மருந்தகத்தில் எல்லோருக்கும் தங்கு தடை இல்லாமல் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தன. அப்படி இருந்த அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டு முதல்வர் மருந்தகம் தேவையா?. புதிதாக திட்டம் கொண்டு வராமல் அதிமுகவின் திட்டத்தை காப்பி அடித்து முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார்கள். கொஞ்சம் கூட வெக்கம் இல்லையா, காப்பி பேஸ்ட் செய்கிறீர்களே.

இருமொழி கொள்கை தான் எங்கள் உயிர்கொள்கை அதில் எங்களுக்கு மாற்றம் இல்லை. திமுக போல் நாங்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் அல்ல. அவர்கள் பேருக்காக அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு நடத்துவார்கள். ஆகவே அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வதா என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்வார். 

அதேபோல் அம்மாவின் அட்சய பாத்திர திட்டமான அம்மா உணவகத்தை சிதைத்து சின்னா பின்னம் ஆக்கிவிட்டார்கள். இப்போது தமிழ்நாட்டில் பெயருக்கு மட்டுமே அம்மா உணவகம் உள்ளது, அம்மா உணவகத்தில் எந்நேரம் போனாலும் ஏதாவது உணவு இருக்கும். இட்லி இருக்கும், சப்பாத்தி இருக்கும், உப்புமா இருக்கும். இப்ப போங்க எதுவும் இருக்காது. இது ஒரு உப்புமா அரசாங்கம்” இவ்வாறு ஜெயக்குமார் பேட்டி அளித்தார். 

இதையும் படிங்க: தமிழக நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டம்.. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share