×
 

400 பேருக்கு அரசு வேலை கிடையாது... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..! ஷாக்கில் மருத்துவர்கள்..!

400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக் கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2642 உதவி மருத்துவர்  பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம், கடந்த ஜனவரி 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து, 2,642 மருத்துவர்களின் தேர்ச்சி பட்டியலை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்த பட்டியலில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில், 2024 ஜூலை 15ம் தேதிக்கு முன் பதிவு செய்யவில்லை எனக் கூறி, 400 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதை எதிர்த்து  மருத்துவர் சாய் கணேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இதையும் படிங்க: 21 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த 'அந்த' பொருள்! ஸ்கேன் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி..!!

அந்த மனுக்களில், 2024 ஜூலை 15ம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்தும், பதிவு செய்யப்படாத நிலையில், தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து அரசு உதவி மருத்துவர் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகக்  குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ பல்கலைக்கழகம், சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்ததால், நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற முடியதாதற்கு பல்கலைக்கழகம் தான் காரணம் என்பதால், தங்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும், இறுதிப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பணி நியமன உத்தரவுகள் இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மும்பு விசாரணைக்கு வந்தபோது, மருத்தவர் தேர்வு வாரியம் சார்பில் அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி,குறிப்பிட்ட கட் ஆப் தேதிக்குள் மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு பெற்றவர்கள் மட்டுமே  பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள் என்றும் உரிய விதிகளுக்கு உட்பட்டு தான் பணி நியமன நடைபெற்றுள்ளதாகவும், எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். 

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படுமா? தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share