காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம்.. ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு..!
அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின் தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், அரூர் தாலுக்காவில், உள்ள குடிமியம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு அப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த மாணவன் விஷால், கழிப்பறைக்கு சென்ற போது அங்கிருந்த சுவர் இடிந்து மாணவன் மீது விழுந்து உயிரிழந்தான்.
இதுதொடர்பாக காவல்துறைக்கு உயிரிழந்த மாணவனின் தந்தை வீரப்பன் புகாரின் பெயரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி, ஆசிரியர்கள் மைதிலி, தேவயானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: திராவிடத்தின் பொய் பித்தலாட்டத்தைதான் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கணுமா.? சசிகாந்தை போட்டு பொளந்த அண்ணாமலை.!
இது தொடர்பாக கடந்த 2016 ம் ஆண்டு பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு மனித உரிமை ஆணையம், தலைவர் கண்ணதாசன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் தரப்பில், பள்ளியின் சுற்றுச்சுவர் பாரமரிப்பு இல்லாமல் இருப்பதாக, அதை சரி செய்ய வேண்டும் என அரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு கடந்த 2014 ம் ஆண்டு கடிதம் அனுப்பியும் சுற்றுச்சுவர் சரி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
இதைப்பதிவு செய்த மனித உரிமை ஆணைய தலைவர், அரசு ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் விஷாலின் தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டார்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர், பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து கண்காணித்து பராமரிக்க, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தொடக்க கல்வித்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தல்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மழைக்காலங்கள், பள்ளித் திறக்கும் காலங்கல் மற்றும் மாதம் ஒரு முறை பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து, ஆய்வுக்கூட்டம் நடத்த உரிய அறிவுறுத்தல்களை தொடக்க கல்வித் துறை இயக்குனருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
பள்ளிக் கட்டிடங்கள் பரமாரிப்பு தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..