மலை வாசஸ்தலங்களில் கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம்... தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆலோசனை..!
மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
இதையும் படிங்க: விவசாயிகள் 2 நாட்கள் உண்ணாவிரதம் நடத்தலாம்... அனுமதி வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!
அப்போது, ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க கூடுதலாக சுயஉதவிக் குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு சிறப்பு வழக்கறிஞர் விளக்கினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிப்ரவரி மாத புள்ளிவிவர கணக்குபடி விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சாதாரண நாட்களில் 3 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும் வருகை தருவதாகக் குறிப்பிட்டனர்.
கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். அறிக்கை தாக்கல் செய்யும் வரை தற்காலிகமாக குறைந்தபட்சமாக எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என முடிவு செய்வது குறித்து, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்க ஏதுவாக, விசாரணையை மார்ச் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், தரமான சுற்றுலாவை வழங்கும் வகையில், மலை அடிவாரத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி, பயணிகளை மின்சார பேருந்து அல்லது கண்ணாடி பேருந்துகளில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு அனுமதிக்கலாம். அது பயணிகளுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என யோசனை தெரிவித்த நீதிபதிகள், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும், தேவையில்லாத விபத்துகள் தவிர்க்கப்படும் எனவும் இதுசம்பந்தமான விவரங்களைக் கேட்டு தெரிவிக்கும்படி அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வாடிக்கை. அதேசமயம், மலை ஏறுவது தொடங்கி முக்கிய இடங்களைப் பார்ப்பது வரை கடும் வாகன நெரிசலில் சிக்கி ஏன்தான் சுற்றுலா வந்தோம் என்று நொந்து போகுமளவுக்கு சமீபகாலமாக போக்குவரத்து நெரிசல் வாட்டி வதைத்து வருகிறது.
போதுமான அளவுக்கு போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தாலும், அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை சமாளிக்க முடியாத அளவுக்கு மாறிவருகிறது. மலையும், அதன் சாலைகளும், விடுதிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களைத் தான் கையாள முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் ஒரே இடத்தில் அனைவரும் குவிவது தான் பிரச்னைக்கு மூலகாரணம்.
அரசாங்கங்கத்தைப் போல தனிநபர்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. இந்த கோடை விடுமுறையிலாவது சுற்றுலாவை திட்டமிடும்போது இந்த கருத்துக்களை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்..
இதையும் படிங்க: மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு புகார்.. மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்...!