திருச்செந்தூரில் கடற்கரையில் ஒதுங்கிய கடவுள் சிலை.. கடற் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை..
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் மிகவும் பழமையான அரிதான சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதுமட்டுமின்றி, திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்கு சினிமா பிரபலங்களும், இயக்குநர்களும், அரசியல் பிரமுகர்களும் படையெடுத்து வருவார்கள்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது திருச்செந்தூர் முருகன் கோயில். மேலும், இந்த முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி அருகே உள்ள நாழிக் கிணற்றில் குளித்து விட்டு, பின்னர் முருகனை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள கடல் அடிக்கடி உள்வாங்கிக் காணப்படுவது வழக்கமாகி விட்டது.
அதுமட்டுமில்லாமல், கடல் உள்வாங்கி காணப்படும் சமயங்களில் கடலில் இருந்து ஏராளமான கற்சிலைகளும், கல்வெட்டுகளும் வெளியே தெரிகின்றன. இந்த சிலைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து செதுக்கப்படும் போது சேதமடைந்த சிலைகளை நீர்நிலைகளில் வீசி செல்வார்கள். அந்த வகையில், சிலைகள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் கடலில் போடப்படுகிறது. சில நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் சமயங்களில் இந்த சிலைகள் கரைகளில் ஒதுங்குவது வாடிக்கையாடிவிட்டது.
இதையும் படிங்க: மின்சார ரயில் சேவை ரத்து! எந்தெந்த பகுதிகள் என தெரிஞ்சுக்கோங்க மக்களே...
இந்த நிலையில் நேற்று இரவு கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டுள்ளது. அதனால் கடலுக்குள் கிடந்த சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதாவது, அந்த சிலை லெட்சுமி நாராயண மூர்த்தி சுவாமியின் சிலையாகும். இந்த சிலை பெருமாள் கோயில்களில் மட்டுமே காணப்படும். அதிலும் சில கோயில்களில் மட்டுமே இருக்கும் அபூர்வ சிலை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சிலையில் நாராயண மூர்த்தி லெட்சுமி அம்பாளை மடியில் அமர வைத்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்த கல் சிற்பத்தில் தலைகள் இல்லாமல் உள்ளது. இந்த சிலைகளின் காலம் 900 ஆண்டுகள் இருக்கும் என்று தொல்லியல் துறை பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் கடற்கரை பகுதியில் மற்றொரு கல்லால் ஆன கால் மட்டும் கிடைத்ததுள்ளது; அதன் அருகே குழந்தையின் கால்தடம் மட்டும் கல்லால் உருவாக்கப்பட்டதும் உள்ளது.
ஏற்கனவே திருச்செந்தூர் கடலில் ஏராளமான கல் சிற்பங்கள் கிடைத்து வரும் நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த சிற்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆகையால், கடற்கரையில் ஒதுங்கும் அனைத்து கற்சிற்பங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
இதையும் படிங்க: திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றம்... கடலென குவிந்த பக்தர்கள்