பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு : 14 காளைகளை அடக்கிய வீரர் முதலிடம்!
பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில், 19 காளைகளை பிடித்து கார்த்தி என்பவர் முதல் இடத்தை பிடித்தார்.
இதனையடுத்து, மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இதனை தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதன் பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின.
ஜல்லிக்கட்டுக்கு 4,820 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. எனினும், 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 1,900 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் வழியே பதிவு செய்திருந்தனர். அவர்களில் 910 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர்.
இதையும் படிங்க: ஏலேய் மாட்ட விட்றா... களத்தில் வீரரை அடித்த காளையின் ஓனர் - களேபரமான வாடிவாசல்!
ஜல்லிக்கட்டு போட்டிகள் 10 சுற்றுகளாக நடத்தப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில் 14 காளைகளை அடக்கிய நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்த துளசி என்ற வீரர் 12 காளைகளை அடக்கி 2 வது இடத்தை பிடித்துள்ளார். பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபா என்ற வீரர் 11 காளைகளை அடக்கி 3 இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த வீரர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், பைக், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: காளையர்களை பறக்கவிட்ட காளைகள்; அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 12 பேர் காயம்!